போதைப்பொருள் நெட்ஒர்க்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள் – மாநில அரசுகளுக்கு அமித் ஷா வலியுறுத்தல்

டெல்லி: போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (NCORD) 10-வது உயர்மட்டக் கூட்டத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கி பேசினார். போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடினால், அடுத்த மூன்றாண்டுகளில் இந்தப் போராட்டத்தில் நாம் பெரும் முன்னேற்றத்தைக் காண்போம் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர், போதைப்பொருள் நெட்ஒர்க்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமித் ஷா உறுதிபட கூறினார். போதை பொருள் வணிகர்களே முக்கியக் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்குக் கடுமையான சட்டரீதியான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

அதே நேரம் போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள் மறுவாழ்வு தேவைப்படும் பாதிக்கப்பட்ட நபர்களாகவே கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டார். போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகக் கடுமையான மற்றும் சமரசமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான சர்வதேச தினத்தில், நமது இளம் தலைமுறையை போதைப்பொருளிலிருந்து பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தி, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம் என்று கேட்டு கொண்டார். இதனிடையே போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (NCB) 2025-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்ட உள்துறை அமைச்சர், ஜம்மு மற்றும் குவஹாத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட NCB மண்டல அலுவலகங்களையும் திறந்து வைத்தார்.

Related Stories: