மாண்டியா: கர்நாடகாவில் காவிரி ஆற்றில் குளித்தபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு பியாடரஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நேற்று மாண்டியா மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்றனர். முதலில் கப்பலம்மா கோயிலுக்குச் சென்ற அவர்கள், மாலை 4 மணியளவில் முத்துதி பகுதியில் உள்ள முத்துதிராயா கோயிலுக்கு வந்தனர். அங்கு சாமி தரிசனம் செய்த பிறகு, அருகில் ஓடும் காவிரி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றனர். அப்போது ஆற்றில் இறங்கி உற்சாகமாக செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, விஜயம்மா (50) எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் தத்தளித்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற சைத்ரா (20), சுவேதா (38), பிரியங்கா (28) மற்றும் அவர்கள் வந்த வாகனத்தின் டிரைவர் மகேஷ் ஆகியோரும் அடுத்தடுத்து ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அன்று இரவு 7.30 மணியளவில் உயிரிழந்த 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மாண்டியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. இதுகுறித்து எஸ்பி ஷோபா ராணி கூறுகையில், ‘ஆற்றில் ஆழம் அதிகமாக இருக்கும் என்று ஊர்க்காவல் படையினர் எச்சரித்தும், அவர்கள் கவனக்குறைவாகச் செயல்பட்டுள்ளனர். இதில் ரவி என்பவர் மட்டும் பொதுமக்களால் மீட்கப்பட்டார். 4 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது’ என்று தெரிவித்தார். ஹலகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
