பெரம்பலூர், ஜூன் 26: பெரம்பலூர் அருகே எளம்பலூர் கோவில் கும்பாபிஷேகத்தில் 2 பெண்களிடம் 8 பவுன் செயின் பறிப்பு. செயின்களை பறி கொடுத்த பெண்கள் கதறி அழுது மயக்கம் அடைந்ததால் பரபரப்பு போலீசார் விசாரணை ஒரே வாரத்தில் 14 பவுன் நகைகள் பறித்தனர். பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுடன் கூடிய கம்பப்பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் எளம்பலூர், இந்திராநகர், எம்ஜிஆர் நகர், காந்தி நகர், சமத்துவபுரம் மட்டுமன்றி பெரம்பலூர், கோனேரி பாளையம், வடக்கு மாதவி, அ.குடிகாடு, அனுக்கூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
எளம்பலூர், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முத்துசாமி மனைவி செல்வி (55). என்பவரிடம் 3 பவுன் செயினையும், எளம்பலூர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நாராயணன் மனைவி சுசீலா (64). என்பவரிடம் 5 பவுன் செயினையும் என 2 பெண் பக்தர்களிடம் 8 பவுன் செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருட்டு தொடர்பாக பெரம்பலூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, கோவில் அருகே வீடுகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கொண்டும், கும்பாபிஷேகத்தை படம் பிடித்த ட்ரோன் கேமரா காட்சி பதிவுகளை கொண்டும் கொள்ளையர்கள் யாராக இருக்க கூடும் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
