வருசநாடு, ஜூன் 26: கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு குமணந்தொழு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் மாலை நேரங்களில் சிக்கன் மற்றும் மீன் பொரித்து விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் உள்ளது. இந்த கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறையான சோதனைகளை மேற்கொள்வதில்லை. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில கடை வியாபாரிகள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்துப் பயன்படுத்துவது, இரண்டு மூன்று நாட்களாக விற்பனையாகாமல் கெட்டுப்போகும் நிலையில் உள்ள மீன்களைப் பொரித்து விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொதுமக்களை கவர்வதற்காக சிக்கன் மற்றும் மீன்களில் தடை செய்யப்பட்ட அடர் சிவப்பு நிறமிகளை அதிகளவில் சேர்த்து விற்பனை செய்து வருகின்றனர். இத்தகைய தரம் குறைந்த மற்றும் நச்சுத்தன்மை கலந்த உணவுகளைப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆசையாக வாங்கிக் கொடுக்கின்றனர். இவ்வாறான உணவுகளை உண்பதால் குழந்தைகளுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி, பேதி செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதுடன், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெயால் இதயம் தொடர்பான பாதிப்புகளும், புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்கள் ஏற்படும் சூழலும் உருவாகிறது.
எனவே பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு கடமலை-மயிலை ஒன்றியப் பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனைகளை நடத்தி விதிமுறைகளை மீறி செயல்படும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
