என்னுடைய வீட்டில் ஒரு பைசா கூட எடுத்துச் செல்லவில்லை சட்டப்பேரவையில் கேள்வி கேட்டதால் ரெய்டு: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: என்னுடைய வீட்டில் ஒரு பைசா கூட எடுத்துச் செல்லவில்லை. சட்டப்பேரவையில் கேள்வி கேட்டதால் ரெய்டு நடத்தியுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சென்னையில் நேற்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: பேரவையில் முதல்வர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு இருந்தார். அப்போது திட்டமிட்டு 2017-26 என்று ஒரு குறிப்பிட்ட ஆண்டை சொல்லி ஆதாரம் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டை சொன்னார்.

அப்போது நான் எழுந்து ஆதாரத்தோடு பேசுங்கள், ஒரு குற்றச்சாட்டை சொல்ல வேண்டுமானால் பேரவை தலைவரிடம் ஆதாரத்தை காட்டி விட்டு தான் சொல்ல வேண்டும் என்பது மரபு என்று தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டு இருந்தேன். பேரவையில் நான் கேட்ட கேள்வியின் அடிப்படையில் தான் இன்றைய தினம் 2022ம் ஆண்டில் கரூரில் ஏதோ ஒரு அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவத்தின் அடிப்படையில் என்னுடைய வீட்டிற்கு ரெய்டுக்கு வந்துள்ளனர். ேமலும் என்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்று ரெய்டு செய்துள்ளனர்.

அதைப்போன்று திருவண்ணாமலையில் உள்ள கல்லூரிக்கு சென்று ஆய்வு என்ற பெயரில் காலையில் இருந்து சம்பந்தமே இல்லாத பொறியியல் கல்லூரிக்கு சென்று சோதனை செய்து கொண்டு இருக்கின்றனர். இப்படி செய்தால் நாங்கள் எல்லாம் பயந்து விடுவோம் என்று நினைக்கின்றனர். வழக்கு தொடரலாம், ரெய்டு பண்ணலாம். நீதிமன்றத்தில் நாங்கள் நிரபராதி என்பதை கட்டயாம் நிரூபிப்போம்.

மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்ற பழமொழி உண்டு, நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, நான் பரிசுத்தமானவன், நான் எந்த தவறும் செய்யாதவன், திரும்ப, திரும்ப ஒரு பொய்யை தொடர்ந்து சொல்வதால் உண்மையாகி விடாது, கண்டிப்பாக நீதிமன்றம் செல்வேன், நிரபராதி என்பதை நிரூபிப்பேன், எங்கள் தலைவர் மிசாவில் ஓராண்டு காலம் இருந்தார்.

அதன்பிறகு 5 ஆண்டுகள் மக்கள் விரும்புகின்ற அற்புதமான எல்லா திட்டங்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் திராவிட மாடல் அரசை நடத்தி காட்டியவர். அதனால் எங்களுக்கு எந்தவிதமான பயம் இல்லை, நீதிமன்றத்தில் சந்திப்பேன். ரூ.40 லட்சம் என்பது வடிகட்டிய முழுவதும் தவறான தகவல், பொய், என்னுடைய வீட்டிலேயோ எங்கையும் ஒரு பைசா கூட எடுத்துச் செல்லவில்லை.

அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர்களில் தான் அறிக்கைகள், சுற்றுப்பயணம் பட்டியல், மக்களுடன் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இந்த கம்ப்யூட்டரில் இருந்து தான் பத்திரிகைகளுக்கு அனுப்புவோம். எனவே அதில் ஏதோ இருக்கிறது என்று நினைத்து எடுத்துச் செல்வதாக கூறினார்கள், நாங்களே கையெழுத்து போட்டு கொடுத்து விட்டோம், பார்த்து விட்டு தருவதாக எடுத்துச் சென்று உள்ளனர்.

குற்றச்சாட்டு சொன்னது என்னவென்றால் கரூரில் சாலை போடப்பட்டுள்ளதில் தவறு நடந்துள்ளது, ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் போன் செய்து உதவி செய்துள்ளார் என்று தான் வழக்கு போடப்பட்டுள்ளது. அலுவலகத்தில் டெண்டர் நடத்துவது என்றால் கோட்ட பொறியாளர் தான் டெண்டர் நடத்துவார். அதற்குரிய ஆவணங்கள் டெண்டர் நடந்த அலுவலகத்தில் தான் இருக்கும், அமைச்சர் வீடு, அலுவலகங்களில் இருக்காது.

அதிகாரத்தின் உச்சம், சட்டமன்றத்தில் உறுப்பினர் கேள்வி கேட்க தான் செய்வோம். ஆதாரத்தை கொடுங்கள் என்று தான் கேட்போம். அதில் என்ன தவறு இருக்கிறது. 7 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளேன். அனுபவம் இருக்கும், முதல்வர் என்ன மக்கள் தொண்டு செய்து வந்துள்ளாரா?. புதிதாக பதவிக்கு வந்துள்ளார் என்பதற்கு இப்படி நடக்கிறது, இதெல்லாம் அதிகாரத்தின் உச்சம் தான் ரெய்டு வந்துள்ளது.

Related Stories: