- திமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எம்.கே. ஸ்டாலின்
- திருவாரூர்
- அமைச்சர்
- மதிவனன்
- Kattur
- கோட்டம் அஞ்சுகம் அம்மையர்…
திருவாரூர்: என்னை எங்கும் தேட வேண்டாம் தமிழக மக்கள் மனதில் இருக்கிறேன் என்று திருவாரூரில் நேற்று நடந்த திருமணவிழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத்திருமண விழா திருவாரூர் காட்டூர் கலைஞர் கோட்டம் அஞ்சுகம் அம்மையார் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றுமுன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து காரில் மயிலாடுதுறை வழியாக திருவாரூர் வந்தார்.
அப்போது மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து திருவாரூர் சன்னதி தெரு இல்லத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு ஓய்வெடுத்தார். நேற்று காலை அங்கிருந்து காரில் மு.க.ஸ்டாலின் காட்டூர் கலைஞர் கோட்டகம் சென்றார். அஞ்சுகம் அம்மையார் அரங்கில் நடைபெற்ற திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத்திருமணத்தை நடத்தி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நேற்றுமுன்தினம் கூட நீங்களெல்லாம் டிவியை பார்த்திருப்பீங்க, ஒரு காட்சி நடந்துச்சு. அதை பற்றியெல்லாம் நம்முடைய முத்தரசன் அவர்களும் குறிப்பிட்டு சொன்னார். மற்றவர்களும் எடுத்து சொல்லியிருக்காங்க. நாட்டுல இன்னைக்கு எத்தனையோ ஏராளமான பிரச்னைகள் இருந்துட்டு இருக்கிறது. ஒரு பக்கம் மின்வெட்டு பிரச்னை, இன்னொரு பக்கம் டெல்டா மாவட்டத்தில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் தண்ணீரை திறந்து விட முடியல அப்படிங்கிற சூழ்நிலை. நீங்கள் ஒன்றை எண்ணி பார்க்க வேண்டும்.
2021க்கு பிறகு 5 வருஷம் நான் ஆட்சிப்பொறுப்பில் இருக்கிற போது, ஒவ்வொரு ஆண்டும், ஓராண்டும் தவறாமல் நாம் மேட்டூர் அணையை குறித்த நேரத்திற்கு முன்பே திறந்து வைத்திருக்கிறோம். அது தான் நம்முடைய ஆட்சி. ஆனால் இதையெல்லாம் எடுத்து சொல்லி, எதிர்கட்சியினுடைய தலைவராக இருக்கக்கூடிய நம்முடைய உதயநிதி விளக்கமாக, விரிவாக சட்டமன்றத்தில் பேசி, சூழ்நிலைகளையெல்லாம் எடுத்து சொல்லி அதன் மூலமாக முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
ஆனால் சட்டமன்றத்தில் முதலமைச்சர் என்ன பதில் சொன்னார்? எங்கே காணோம்? உங்க அப்பாவை காணோம், இதை தான் சொல்லியிருக்கிறார். அப்பாவை அங்கே தேடாதீங்க, மக்கள் மனசுல பதிந்திருக்கிறார், அது தான் முக்கியம். நீங்கள் ேதடுகிற இடத்தில் நான் இருக்க மாட்டேன். மக்கள் தேடற இடத்துல நிச்சயமாக நான் முதல் ஆளாக நிற்பேன். சட்டமன்றத்தில நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்னைக்கு நான் மக்கள் மன்றத்திலே இருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் எடுத்து சொல்லிக்கொள்கிறேன்.
நான் அரசியலுக்கு வந்து கிட்டத்தட்ட 60 வருஷம் ஆயிருக்கு. இந்த 60 வருஷமாக மக்களுடன் மக்களாகத்தான் இருக்கிறேன். ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டு மக்களுக்காக பணியாற்றக்கூடிய வகையில் தான் திமுகவை சார்ந்தவர்கள் இருக்கிறோம் என்பதை இந்த இடத்தில் எடுத்து சொல்லி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான் முதலமைச்சராக இருந்த போது 4 அல்லது 5 முறை சென்று ஆய்வு நடத்தி உள்ளேன். முதலமைச்சராக இருந்தபோது ஐந்து வருஷத்துல நான் நடத்துன மாதிரி ஆய்வுக்கூட்டம் எந்த முதலமைச்சரும் நடத்தியிருக்க மாட்டாங்க.
நான் பயணம் பண்ண மாதிரி எந்த முதலமைச்சரும் பயணம் பண்ணியிருக்க மாட்டாங்க. முக்கியமாக, நான் கோட்டைக்கு போனது தான் அதிகமாக இருந்திருக்கே தவிர, எந்த முதலமைச்சரும் அதிகமாக இருந்திருக்க மாட்டாங்க. இன்னுங்கூட சொல்லுவேன், நீங்க முதலமைச்சரை தேடி பாக்கணும்னா, இன்னைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சரை கேட்டு கொள்கிறேன். கோட்டையில் தான் கோப்புகள் எல்லாம் இருக்கிறது.
ஆகவே, அந்த கோப்புகளை எடுத்து பாருங்க. அதுல கையெழுத்து போட்டு இருப்பேன், மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்னு. தேடிபாக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த கையெழுத்த பாருங்க. அது தெரியும் உங்களுக்கு. மகளிருக்கு கலைஞர் உரிமை தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும்னு கையெழுத்து போட்டுருப்பான், அங்க ஸ்டாலின் இருப்பான். புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அந்த கோப்பை பாருங்க, அதுலயும் மு.க.ஸ்டாலின் கையெழுத்து போட்டுருப்பான்.
தமிழ் புதல்வன் திட்டம் ரூ.1000, அதுல ஸ்டாலின் இருப்பான். ஆகவே, என்னை தேடிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமே இல்லை. கோட்டையிலேயே இருக்கிறேன். நான் தான் ஆட்சியில் இருக்கிறேன். இன்னும் சொல்றேன், அண்ணா சொல்லியிருக்கிறார், ஒரு முறை சொன்னார். ‘‘தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயரை சூட்டியிருக்கிறேன், இது போதும் எனக்கு வாழ்க்கையில. ஆக, நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தமிழ்நாடு என்று பெயர் சொல்லும் வரைக்கும் என் பெயர் இருக்கும்’’ என்று சொல்லியிருக்கிறார்.
அது மாதிரி, மகளிர் உரிமைத்திட்டம் இருக்கிற வரைக்கும், இந்த ஸ்டாலின் தான் முதலமைச்சர். இப்படி சொல்லிட்டே இருக்கலாம். ஆக, நான் இங்க அண்ணனுடைய, மதிப்புக்குரிய சகோதரர், துணைப்பொதுச்செயலாளர் ராஜா பேசுகிற போது ஒன்றை சொன்னார்கள். கூட்டணியை பற்றி எல்லாம் எடுத்து சொன்னார்கள். எப்பொழுதுமே கலைஞர் அவர்கள் கூட்டணி அமைச்சா, அந்த கூட்டணியை பாதுகாப்பாக வைத்திருப்பார்.
அவங்களாக போனாத்தான் போவாரே தவிர, கலைஞர் இதுவரைக்கும் விட்டது கிடையாது. அதே மாதிரிதான் நானும் அவர் வழி நின்று, நான் எந்த கூட்டணியாக இருந்தாலும் விடமாட்டேன். ஆனால், அவர்களாக போனால் அதற்கு நான் ஒன்றும் சொல்ல முடியாது. அது தான் என்னுடைய கடமை. ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் கூட்டணியே தேவையில்லை என்று தான் சொல்லி கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக, அதையும் நாங்கள் விரைவிலே பரிசீலிப்போம், பரிசீலிப்போம், பரிசீலிப்போம் என்பதை மாத்திரம் எடுத்து சொல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
* விவசாயிகள் போராட்டத்தை ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும்
திருவாரூர் சன்னதி தெரு இல்லத்துக்கு நேற்று காலை 9.45 மணிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மாநில செயலாளருமான முத்தரசன் அங்கு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் புறப்படுவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: மரியாதை நிமித்தமாக முத்தரசன் என்னை சந்தித்தார்.
உடல்நிலை நன்றாக இருக்கிறதா என்று கேட்டார். நானும் கேட்டேன். அவ்வளவுதான், வேறு ஒன்றும் பேசவில்லை. தமிழக முதல்வர், விமர்சனங்களை என் மீது வைக்கட்டும். அதில் என்ன பிரச்னை இருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தை ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும். விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதற்கு இதுவரை பதில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
