கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று, சுவேந்து அதிகாரி, முதல்வராக உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு, மம்தாவும் அவரது கட்சியும் தினம் தினம் சரிவை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா, தன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சி தலைவரானார். அதேபோல், 20 மக்களவை எம்பிக்கள் பெயர் தெரியாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் இணைந்தது. இது மம்தாவுக்கு மேலும் பின்னடைவை தந்தது.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் தீவிர விசுவாசியாக கருதப்படும் எம்பியான மஹுவா மொய்த்ரா, திடீரென பாஜ முதல்வர் சுவேந்து அதிகாரியை பாராட்டியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அவர், பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘தங்களின் அரசியல் பாதைகள் வேறுபட்டிருந்தாலும், தனிப்பட்ட முறையில், சுவேந்து அதிகாரியுடன் எனக்கு மிகவும் நல்ல நட்பு இருந்துள்ளது. நாங்கள் இருவரும் திரிணாமுல் காங்கிரஸில் ஒன்றாக இருந்தபோது, அவர் எனக்கு மிகவும் ஆதரவளித்தார்.
குறிப்பாக, 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை. நான் இரவு முழுவதும் அழுதேன். அப்போது, சுவேந்து எனக்கு ஆறுதல் கூறினார். அதேபோல், நான் முதன்முதலில் கரீம்பூரில் போட்டியிட்டபோது, எனக்காக பிரசாரம் செய்ய யாரும் வரவில்லை. ஆனால் எனது முதல் பேரணியை சுவேந்து அதிகாரிதான் நடத்தினார். எனினும், சுவேந்து, வேறு கட்சிக்கு சென்றுவிட்டார். அதனால், நாங்கள் இப்போது பேசி கொள்வதில்லை. ஆனால், அவர் எனக்கு செய்த உதவியை என்னால் மறக்க முடியாது’ என்றார்.
மஹுவா மொய்த்ரா, கட்சி தாவும் எண்ணத்தில் இல்லை என்றாலும், அவரது கருத்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதேநேரத்தில், அவரது நடவடிக்கைகளும் திரிணாமுல் காங்கிரசால் உற்றுநோக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மம்தா பானர்ஜிக்கு மேலும் மேலும் பின்னடைவை தருவதாக அமைந்துள்ளது.
