×

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாளையொட்டி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்கள்

 

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர் பெருமக்கள் இன்று (25.6.2026) சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்கள் 1931-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் நாள் அலகாபாத் நகரில் ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியிலும், பின்பு புனே பெர்குஷன் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். மேலும், 1950-ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டமும் பெற்றார்.

வி.பி.சிங் அவர்கள் சட்டக் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, சர்வோதய சமாஜத்தில் இணைந்து, பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து, தனது நிலங்களை தானமாக வழங்கினார்.

1969-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர், 1971-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர், 1974-ஆம் ஆண்டு இந்திராகாந்தி அம்மையார் அவர்களின் மந்திரி சபையில் வர்த்தகத் துறை துணை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தார்.

1980ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்தார். வி.பி.சிங் அவர்கள் 1984-ஆம் ஆண்டு இந்திய அரசின் நிதியமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்தார். இதனைத் தொடர்ந்து, 1989-ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டினார். அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார்

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக B.P. மண்டல் அவர்கள் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்திய சமூக நீதிக் காவலர், வி.பி. சிங் அவர்கள் ஆவார்.

Tags : Social Justice ,Policeman ,V.P. Singh ,Chennai ,Government of Tamil Nadu ,Social Justice Policeman ,State ,College ,Chennai… ,
× RELATED ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல;...