×

மத்தியிலும், மாநிலத்திலும் முழுமையான சமூகநீதியை ஏற்படுத்துவதே வி.பி.சிங்குக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை: அன்புமனி

 

சென்னை: மத்தியிலும், மாநிலத்திலும் முழுமையான சமூகநீதியை ஏற்படுத்துவதே வி.பி.சிங்குக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்று அன்புமனி கூறியுள்ளார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சீண்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் ஆணையத்தின் அறிக்கைக்கு உயிரூட்டி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கிய சமூகநீதிக் காவலர், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு இன்று 96-ஆம் பிறந்தநாள். இந்த நாளில் அவருக்கும், அவரது சமூகநீதி சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.

சாத்தியமானவற்றை செய்வது சாதனை அல்ல. சாத்தியமில்லாதவற்றை செய்வது தான் சாதனை ஆகும். மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லை. சுதந்திர இந்தியாவின் முதல் 30 ஆண்டுகளில் அதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை விட, அவற்றை முறியடிப்பதற்கான தீட்டப்பட்ட சதித்திட்டங்கள் தான் அதிகம். அவற்றை முடியடித்து 1978-ஆம் ஆண்டில் மண்டல் ஆணையத்தை அமைத்தவர் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய். அதன் பின் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த அறிக்கையை செயல்படுத்தியவர் வி.பி.சிங்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில், மக்கள்தொகைக்கு இணையான அளவில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்பதே சமூகநீதியாளர்களின் விருப்பம். வி.பி. சிங் அவர்களின் விருப்பமும் அது தான். ஆனால், பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50% உச்சவரம்பு தான் அதற்கு தடையாக இருந்தது. உயர்வகுப்பு ஏழைகளுக்காக இட ஒதுக்கீட்டு வழக்கில் அந்த உச்சவரம்பு தகர்க்கப்பட்டு விட்ட நிலையில், இடஒதுக்கீடு என்ற தத்துவத்தை ஒதுக்கி வைத்து விட்டு, இடப்பங்கீடு என்ற தத்துவத்தை பின்பற்ற வேண்டும்.

மத்தியிலும், மாநிலத்திலும் 100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற சமூகநீதி இலக்கை அடைவது தான் நமது லட்சியமாக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிய பயணத்தின் முதல் அடியாகத் தான் மத்தியிலும், மாநிலத்திலும் முறையே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பும், சமூகநீதி சர்வேயும் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தப் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு என்ற இலக்கை அடைவது தான் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

Tags : V. ,Singh ,Chennai ,ANBUMANI ,Mandal Commission ,
× RELATED அமோனியா வாயு கசிவால் பலியானோர்...