*விவசாயிகள் சங்கம் எதிர்பார்ப்பு
தஞ்சாவூர் : அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் 251 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ளன.
குறிப்பாக, அம்மாபேட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்து சேமிப்பு கிடங்குகளிலும் இருப்பில் உள்ளதால், தற்போது புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அரவைக்கு அனுப்பி பாதுகாப்பான இடங்களில் சேமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழை உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
