சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். 3 நாட்களாக இந்த பேருந்துகள் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்த நிலையில், இன்று பேருந்து சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். மேலும், பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாகவும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் நாட்டிலேயே சிறந்த கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. அதை மேலும் மேம்படுத்தும் வகையில் மாநில அரசு சார்பில் புதிய பேருந்துகள் தொடர்ச்சியாக வாங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. மாநகரப் போக்குவரத்துக்கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் உள்ள நிலையில், மீதமுள்ள 6 போக்குவரத்துக் கழகங்கள் 24 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த போக்குவரத்துக் கழகங்களுக்குப் புதிதாக வாங்கப்பட்ட 300 பேருந்துகளின் தொடக்கவிழா கடந்த 22-ஆம் தேதி முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டன. இதற்காக அந்த பேருந்துகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டதாகவும் இருப்பினும் தொடக்க விழா நடத்தப்படாததால் அந்த பேருந்துகள் 3 நாட்களாக அப்படியே நிற்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டன.
இந்நிலையில் போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்கு வாங்கப்பட்ட இந்த 300 புதிய பேருந்துகள் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த விழாவில் பேருந்துகள் சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். சென்னை உட்பட 6 கோட்டங்களுக்கு புதிய பேருந்துகள் சேவை தொடங்கி வைத்தார். ரூ.127.21 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 300 புதிய பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
164 டீசல் பேருந்துகள்; 136 சிஎன்ஜி பேருந்துகள் சேவை தொடக்கம். பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கீழ் 300 புதிய வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்தத் தொடக்க விழாவை அடுத்து, திருவல்லிக்கேணியில் இருந்து பெரம்பூர் செல்லும் ’29 ஏ’ என்ற மாநகரப் பேருந்தில் முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நேரில் பயணம் செய்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்
