கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி தங்கச் சுரங்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு

அமராவதி: கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரியில் ஜியோ மைசூர் சர்வீசஸ் மற்றும் டெக்கான் கோல்ட் மைன்ஸ் நிறுவனங்களால் நிறுவப்பட்ட தங்கச் சுரங்கத் திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். மேலும், இத்திட்டத்தின் இரண்டாவது விரிவாக்கப் பிரிவுக்கு அடிக்கல் நாட்டியதுடன், தங்கம் தாங்கிய தாதுவை பதப்படுத்துவதற்காக ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கனரக சுரங்க வாகனங்களை இயக்குவதற்காக, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு சிமுலேட்டர் இயந்திரங்களில் பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி மையத்தையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

ஜொன்னகிரியில் இருந்து தங்கத்தை அகழ்ந்தெடுத்தல், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்த நிறுவனங்கள் ரூ.405 கோடி முதலீடு செய்கின்றன. இத்திட்டம் ஆரம்பத்தில் ஆண்டுக்கு 400 கிலோகிராம் தங்கத்தை உற்பத்தி செய்யும், அடுத்த கட்டத்தில் இது 900 கிலோகிராமாக அதிகரித்து, இறுதியில் ஆண்டு உற்பத்தி 2 டன்களை எட்டும்.

சுரங்கம் மற்றும் தங்கம் பிரித்தெடுக்கும் செயல்முறைகளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு செய்ததுடன், தங்கக் கட்டிகள் உள்ளிட்ட இறுதிப் பொருட்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், சுரங்கம் தோண்டுவது முதல் இறுதி உற்பத்தி வரையிலான முழு செயல்முறை குறித்தும் ஜியோ மைசூர் தலைவர் பிரபாகரன் மற்றும் நிர்வாக இயக்குநர் நவீன் லால் சந்திரா ஆகியோர் முதல்வருக்கு விளக்கினர்.

இந்நிகழ்ச்சியில், ஜியோ மைசூர் சர்வீசஸ் மற்றும் டெக்கான் கோல்ட் மைன்ஸ் நிறுவனங்கள், ஜொன்னகிரியில் இருந்து பெறப்பட்ட தங்கத்தால் செய்யப்பட்ட ஆந்திரப் பிரதேச வரைபடத்தை ஆந்திரப் பிரதேச அரசுக்கு வழங்கின. இந்த நினைவுப் பரிசு அமராவதியில் அமையவிருக்கும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

Related Stories: