செய்யாறு, ஜூன் 25: முன்விரோத தகராறில் தாய், மகனை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்யாறு அடுத்த பாராசூர் லட்சுமணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கஜேந்திரன். இவர்களுக்கு இடையே வீட்டுமனை வழி பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த 21ம் தேதி ராஜேந்திரன் வீட்டு வாசலில் இருந்த மரக்கிளையை யாரோ வெட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இதைப்பார்த்த ராஜேந்திரன் மனைவி வளர்மதி வீட்டு வாசலில் நின்றுக்கொண்டு மரம் வெட்டிய நபர்களை திட்டிக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த கஜேந்திரன், அவரது மனைவி பிரேமா, தம்பி நாகராஜ் ஆகியோர் வளர்மதியை தட்டிக்கேட்டுள்ளனர்.அதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து வளர்மதியை கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதைத்தடுக்க முயன்ற வளர்மதியின் மகன் சரண்ராஜையும் தாக்கினர். இதில் படுகாயமடைந்த 2 பேரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
