நீரோடையான மூல வைகை ஆறு

 

வருசநாடு, ஜூன் 25: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மூலவைகை ஆறு மீண்டும் நீரோடையாக மாறி வருகிறது. மூலவைகையில் செல்லும் தண்ணீர் வாலிப்பாறை, முருக்கோடை, தும்மக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர் வழியாக சென்று குன்னூர் அருகே பெரியாற்றில் கலந்து ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்த்தேக்கப் பகுதியை சென்றடைகிறது. இவ்வகையில் வைகை அணையின் முக்கிய நீராதாரமாகவும், கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களின் விவசாயப் பணிகள் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும் மூலவைகை ஆறு உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மூலவைகை ஆற்றில் கொஞ்சம் நீர்வரத்து ஏற்பட்டது. அதன் பின்னர் போதிய மழை இல்லாததால் ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த இருவாரங்களாக மழை இல்லாததால் தற்போது மூலவைகை ஆறு மீண்டும் நீரோடையாக காட்சியளிக்கிறது. இதனால் இந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

 

Related Stories: