திருப்பரங்குன்றம், ஜூன் 25: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.93 லட்சம் கிடைத்துள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கைகளை கணக்கிடும் பணிகள் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். இதன்படி கடந்த மாதம் பகதர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள், சுப்பிரமணியசுவாமி கோயில் துணை ஆணையர் ஞானசேகரன், முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இதில் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி, சத்யசீலன், அலுவலர்கள் மணிமாறன், கோபி, புகழேந்தி, நெடுஞ்செழியன் உள்ளிட்டோருடன் கோயில் ஊழியர்கள், வேத பாடசாலை மாணவர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர், வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதன்படி நேற்று காலை தொடங்கிய பணிகள் மாலையில் முடிவுக்கு வந்தது. இதில் காணிக்கையாக ரூ 93 லட்சத்து 19 ஆயிரத்து 243 மற்றும் 234 கிராம் தங்கம், 4 கிலோ 234 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
