புதுக்கோட்டை, ஜூன் 25: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தோர் கலந்து கொண்டு 14 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். மேலும், கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டு நிலுவையிலுள்ள மனுக்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.மேலும், பெறப்பட்ட மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் உதவி இயக்குனர் (முன்னாள் படைவீரர் நலன்) விஜயகுமார், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
