வேதாரணயம், ஜூன் 24: வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி தெற்கு எஸ்கே அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு சிறந்த மாணவர்களுக்கான காமராஜர் விருது பள்ளி மாணவர்கள் ராகுல், அனிதா, விஷால், ஆகிய மூன்று மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. விருது பெற்ற மூன்று மாணவர்களுக்கும் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சண்முகம் தலைமை வகித்து அரசு வழங்கிய ரூ.20,000 காசோலையும் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி துணை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேதரத்தினம், பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன், முன்னாள் தலைமை ஆசிரியர் தொல்காப்பியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தராஜ்,பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன் உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பள்ளிக்கு சென்ற ஆண்டு சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதும் ஒரு லட்சம் ரொக்கமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
