கோவை: தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை பொறுத்தவரை, எங்கு சென்றாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும், நிகழ்ச்சி முடிவில்தான் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் லட்சிய பயணம். இதில், எந்த தவறும் இல்லை, இதற்கான தெளிவான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரை போலவே, மாநிலத்தில் ஆளுநரையும் நாம் மதிக்க வேண்டும். நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை குறைவாகவே உள்ளது. வடமேற்கு பருவமழை வரும்போதுதான் நிலைமை மாறும். கடந்த 21 ஆண்டுகளில் 7 முறை மட்டுமே ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. மழையில் 200 மூட்டை நெல் நனைந்து வீணாகி விட்டதாக கூறுவது தவறான தகவல். 20 மூட்டைகள் மட்டுமே நனைந்துள்ளன.
நெல் மூட்டைகளை தார்ப்பாய்கள் கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்க உணவுத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காமெடியாக பேசுகிறார். அவருடைய விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாது. புதிய ஆட்சி அமைந்த பிறகு மரபு படியே பிரதமரையும், குடியரசு தலைவரையும், ஒன்றிய அமைச்சர்களையும் முதல்வர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பது இயல்பான ஒன்று. ஆட்சி அமைக்க யாரிடமும் நாங்கள் உதவி கேட்கவில்லை.
முதல்வர் தெளிவாக உள்ளார். நாங்கள் தவறுசெய்ய மாட்டோம். அதேசமயம், தவறு செய்தவர்கள் எந்த மட்டத்தில் இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்த நயினார், ‘‘தவெக ஆட்சியமைக்க யார் யாரையெல்லம் கான்டாக்ட் பண்ணீங்கன்னு லிஸ்ட் வெளியிடட்டுமா?’’ என சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* ‘தவெக கொடியை மாணவர்கள் கட்டியதில் தவறு இல்லையாம்’
‘‘முதல்வர் விஜய் பிறந்தநாள் அன்று பள்ளி மாணவர்கள் கட்சிக்கொடியை ஏந்தி வந்ததில் எந்த தவறும் இல்லை. இது, ஒரு உணர்வுப்பூர்வமான எழுச்சி. குழந்தைகளை கொடி ஏந்தி வரச்சொல்லி நாங்கள் நிர்ப்பந்திக்கவில்லை. அது அவர்களது அன்பின் வெளிப்பாடு’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
