×

தூரப் பார்வை குறைபாடு ஆபத்தானதா?

நன்றி குங்குமம் டாக்டர்

முந்தைய காலகட்டங்களில் மக்கள் வெளி உலக வேலைகளில் அதிகம் ஈடுபட்டு வந்தனர். குழந்தைகளும் பல மணி நேரம் வெளியில் ஓடி ஆடி விளையாடினார்கள். இதனால், தங்கள் அன்றாட வாழ்க்கையில் தூரத்திலிருக்கும் பொருட்களையும், அருகில் இருக்கும் பொருட்களையும் மாறி மாறிப் பார்ப்பதில் இயல்பாக நேரத்தைச் செலவிட்டார்கள். இதனால், கண்கள் பெரிய அழுத்தத்துக்கு உள்ளாகாமல் ஆரோக்கியமாக இருந்தது.

ஆனால், இன்றைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. இப்போது குழந்தைகள் உட்பட, மக்கள் கணினி, மொபைல் அல்லது தொலைக்காட்சி திரைகளையே ஒரு நாளில் பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால், இன்று சிறுவயதிலேயே கண்களில் பலவித பிரச்னை ஏற்பட்டு கண் கண்ணாடி அணிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் தூர பார்வை குறைபாடும் ஒன்று. தூர பார்வை குறைபாடு என்பது என்ன.. அதனால் ஏற்படும் பிரச்னைகள் என்ன… அதற்கான தீர்வு என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் முதன்மை கண் மருத்துவர் ராஜேஸ்வரி எம்.

தூரப்பார்வை குறைபாடு என்பது, மின்னணு சாதனங்கள் மற்றும் மொபைல்களை அதிகநேரம் பயன்படுத்துவதனால் ஏற்படும் சில பிரச்னைகளை குறிப்பது போலத் தோன்றும். ஆனால், இதனால் உடனடியாகப் பெரிய பாதிப்பு வந்துவிடும் என்று அர்த்தமல்ல; மாறாக, மக்கள் தொடர்ந்து இடைவெளியின்றித் திரைகளுக்கு மிக அருகில் அமர்ந்து அதையே உற்றுநோக்கி வேலை செய்வதால், அவர்களின் பார்வை முறை அருகில் மட்டுமே பார்க்கும் ஒரு பழக்கமாக மாறிவிடுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது நம் கண்கள் வெவ்வேறு தூரங்களில் உள்ள பொருட்களையே பார்க்கும் வாய்ப்பை இழக்கும் ஒரு நிலையே இது. மனிதர்களின் கண் பார்வை அமைப்பு மிகவும் நெகிழ்வானது; ஆனால் அதற்குத் தொடர்ந்து மாற்றங்கள் தேவைப்படுகின்றன. தூரத்திலிருக்கும் பொருட்களைப் பார்க்கும்போது கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

ஒருவர் தொடர்ந்து அருகில் உள்ள பொருட்களையே பார்க்கும்போது, கண்களுக்கு ஓய்விருக்காது; கண்களோடு மனமும் தளர்வாக இருக்க இயலாது. இதன் விளைவாக, இந்தத் தூரப்பார்வை குறைபாடு கண் சோர்வு மற்றும் கண் பாரம் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. நீண்ட நேரம் அருகில் உள்ளவற்றையே பார்த்துக் கொண்டே இருப்பதால் கண் வலி, கண்கள் இழுப்பது போன்ற உணர்வு, தலைவலி, மங்கலான பார்வை, ஒரு பொருளின் மீது கவனத்தைக் குவிப்பதில் சிரமம், கண் வறட்சி அல்லது கண்களைச் சுற்றி ஒருவித அழுத்தம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

மேலும், அருகில் இருந்து திடீரெனத் தூரத்திலிருக்கும் ஒரு பொருளுக்குப் பார்வையை மாற்றும் திறனும் பெருமளவில் பாதிக்கப்படும். இன்றைய நவீன வாழ்க்கை முறையில் தூரத்திலுள்ள பொருட்களைப் பார்க்கும் வாய்ப்புகள் குறைந்து, அருகில் உள்ளவற்றை மட்டுமே பார்த்து வேலை செய்யும் நேரம் அதிகரித்துள்ளதால், இந்த அறிகுறிகள் நாளுக்கு நாள் பெரும்பாலான மக்களிடம் அதிகரித்து வரும் பொதுவான அம்சங்களாக மாறி வருகின்றன.

குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்கள் வீட்டிற்கு வெளியில் விளையாடுவதில்லை என்ற பிரச்னையையும் மற்றும் குழந்தைப் பருவத்தில் அவர்களுக்கு முறையான பார்வைத்திறன் வளர்ச்சி இருப்பதன் அவசியம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். இன்றைய தலைமுறை குழந்தைகள் முந்தைய தலைமுறையினரை விடக் குறைந்த அளவே சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இதனால், குழந்தைகள் வீட்டிற்கு வெளியே இயற்கையோடு போதுமான நேரத்தைச் செலவிடுவதில்லை என்ற முடிவுக்கு நாம் வரலாம். வெளிப்புற விளையாட்டுகள் மிக முக்கியமானவை; ஏனெனில் அவை கண்களுக்கு அருகே மற்றும் தூரமான இடத்திற்கு பார்வைத்திறனை மாற்றி மாற்றி பயன்படுத்த உதவுகின்றன.

அதாவது, கண்களுக்கு ஒரு மாறுபட்ட பயிற்சியைத் தருகின்றன. முந்தைய தலைமுறையினருடன் ஒப்பிடும்போது, இன்றைய குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள் மற்றும் மிகச் சிறிய வயதிலிருந்தே அருகில் உள்ள திரைகளைப் பார்க்கும் பழக்கத்திற்கு ஆளாகி, அதையே இயல்பானதாக கருத தொடங்குகின்றனர். எனவே, குழந்தைப் பருவத்தில் இந்த இரு பார்வைகளுக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவது இந்த காலகட்டத்தில் அத்தியாவசியமானதாக இருக்கிறது.

மேலும், தூரப் பார்வை என்பது ஏதோ தூரத்தில் இருக்கும் பொருட்களைப் பார்ப்பது மட்டுமே அல்ல; கண்களுக்கு எந்தவொரு அழுத்தமும் தராமல், தளர்வாக தூரத்துப் பொருட்களைப் பார்ப்பதும், அவை எந்தப் பகுதியில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதுமே ஆகும். வெளியில் நேரத்தைச் செலவிடுவது கண்களின் இந்த நெகிழ்வுத் திறனை வளர்க்க உதவுகிறது.

குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் இந்த தூரப்பார்வை குறைபாடு ஒரு பொதுவான பிரச்னையாக மாறி வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்குக் கணினி, மொபைல் போன்களையே முக்கியக் கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர். மேலும், அவர்களில் பலர் பலமுறை ஒரு திரையிலிருந்து மற்றொரு திரைக்கு மாற வேண்டியுள்ளது. இத்தகைய வேலைகள் கண்களுக்கு எந்தவொரு ஓய்வையும் தருவதில்லை. இது கடுமையான கண் சோர்வுக்கு வழிவகுக்கிறது. இது தூரத்திலுள்ள பொருட்களைப் பார்க்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்பதை உணர்த்துகிறது.

தற்காப்பு முறைகள்

கண் பார்வை பிரச்னைகளைத் தடுக்க மொபைல், கணினி பயன்படுத்துவதை நிறுத்த வேண்டியதில்லை என மருத்துவர்கள் கூறுகிறார்கள். சோர்வைக் குறைக்கச் சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். அவை:

வேலைக்கு இடையே வெளியில் சென்று வரலாம்; பார்வையை மாற்றிப் பார்க்கும் எளிய பயிற்சிகளைச் செய்யலாம்; கண்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தவறாமல் ஓய்வு கொடுக்கலாம்.இவை அண்மைப்பார்வை, தூரப் பார்வைக்கு இடையே ஆரோக்கியமான சமநிலையைத் தக்கவைக்க உதவும். அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளலாம். சுருக்கமாகக் கூறின், நீண்ட நேரம் கண்களைப் பயன்படுத்திய பிறகு, கண்களுக்கு ஓய்வுகொடுக்க வைப்பதற்கான வழிகளை நாம் ஒவ்வொருவரும் கண்டறிவதும், அதை தினசரி செயல்படுத்துவதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

தொகுப்பு:-ஸ்ரீ தேவி குமரேசன்

Tags : Kungumam ,
× RELATED உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டியவை!