நாகர்கோவிலில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்துடன் போதை விழிப்புணர்வு

நாகர்கோவில் : கோட்டார் மறை மாவட்ட ஆற்றுப்படுத்துதல் பணியகத்தின் இயக்குநரும் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஜெ. பிரான்சிஸ் சேவியர் நெல்சன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

நாகர்கோவிலில், சமூக நலனை முன்வைத்து அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முன்னோடி முயற்சியாக ‘உலகளாவிய டிஜிட்டல் சங்கமம் 2026’ என்ற நிகழ்வு நடைபெற உள்ளது.

கோட்டாறு மறைமாவட்டத்தின் ஆற்றுப்படுத்துதல் பணியகம் சார்பில் நாளை (25-ம் தேதி) அன்று நாகர்கோவில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் இல்ல வளாகத்தில் உள்ள அருள்வாழ்வு இல்லத்தில் நடைபெறுகிறது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் போதைப் பழக்கத்தால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், சாட் ஜிபிடி மற்றும் ஜெமினி ஏஐ உள்ளிட்ட பல்வேறு ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி எவ்வாறு மிக விரைவாகவும் உலகளாவிய அளவிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதைப் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நேரடியாக அறிமுகப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கியக் கருப்பொருளாகும்.

இந்த ஒரு நாள் நிகழ்வின் மூலம் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் ஏஐ கருவிகளைக் கொண்டு போதை விழிப்புணர்வு போஸ்டர்கள், தகவல் வரைபடங்கள், சமூக வலைதளப் பதிவுகள், விழிப்புணர்வுப் பாடல்கள், குரல் அறிவிப்புகள் மற்றும் குறும்படத் திரைக்கதைகளை தாங்களாகவே உருவாக்க பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், ஏஐ ஆன்டி டிரக் அம்பாசிடர் உருவாக்கும் சிறப்புப் பயிற்சியும், மாணவர்களுக்கான ஏஐ அடிப்படையிலான வினா-விடைப் போட்டிகளும் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வை ஆற்றுப்படுத்துதல் பணியகத்தின் இயக்குநரும் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஜெ. பிரான்சிஸ் சேவியர் நெல்சன் முன்னின்று நடத்த, ஏஐ திறன் பயிற்சியாளர் அருள் குமரேசன் பயிற்சிகளை வழங்குகிறார்.

‘போதையைத் தவிர், ஏஐ உடன் இணை’ மற்றும் தொழில்நுட்பம் சமூக நலனுக்காக என்ற முழக்கங்களுடன் நடைபெறும் இந்த ஆரோக்கியமான சமுதாய மாற்றத்திற்கான முயற்சியில் மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்று பயன்பெறலாம்.

போதை எதிர்ப்பு தினத்தையொட்டி ஜூன் 26ம் தேதி மாவட்டம் முழுவதும் இருந்து 34 ஜோதி பயணங்கள் புறப்பட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைகிறது. அங்கு குமரி மாவட்ட கலெக்டர் பிரதாப், எஸ்.பி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கும் விழா நடைபெறுகிறது.

அன்று பல்வேறு போதை எதிர்ப்பு நிகழ்வுகளும் அங்கு நடைபெறுகிறது. இதில் ஏசுசபை போதனை பணிக்குழு, குளச்சல் காணிக்கை மாதா புதுவாழ்வு இல்லம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: