காவேரிப்பாக்கம் : வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முசிறி ஊராட்சியில் அருகே மலைகள் அமைந்துள்ளது. இந்த மலையின் கீழ்ப்பகுதியில் அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமித்து தனியாருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட ஜல்லி மெஷின்கள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த கல்குவாரியால் புகைமூட்டம் மற்றும் வெடிச்சத்தம், லாரிகள் சவுண்டு ஆகியன கேட்டுக் கொண்டே இருக்கிறது. மேலும் இந்த ஊராட்சியில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து ஜல்லி மெஷின்களை அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை அவ்வழியாக வந்த லாரிகளை சிறைப்பிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் எந்த அரசு அதிகாரிகளும் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத காரணத்தால் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு சென்றனர். இதுதொடர்பாக இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் ஊரில் ஆடு மற்றும் மாடுகள் மேய்ச்சலுக்காக சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பு அக்காலத்தில் இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்று மேய்ச்சலில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் தற்போது இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட ஜல்லி மெஷின்கள் அமைந்துள்ளதால், அதிலிருந்து வரும் கல் துகள்கள் புல்லின் மீது படர்ந்து காணப்படுகிறது. இதனால் ஆடு மாடுகள் மேய்க்கும் போது உடல் உபாதைகள் ஏற்பட்டு இறந்து விடுகின்றன.
இதன்காரணமாக இப்பகுதிகளில் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் மரச்செடிகள் வளர்ப்பது மற்றும் மழைநீர் தேக்கத்திற்காக குளங்கள் வெட்டப்பட்டு வருகிறது. தற்போது இப்பகுதியில் அரசு அதிகாரியில் உதவியுடன் தனிநபர் அரசு இடத்தை ஆக்கிரமித்து ஜல்லி மெஷின் கட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
