காட்டுமன்னார்கோவில் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 10 அடி நீள ராட்சத முதலை பிடிப்பு

காட்டுமன்னார்கோவில், ஜூன் 24: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கருணாகரநல்லூர் கிராமத்தில் உள்ள தேவன் ஏரியில் கடந்த சில நாட்களாக பெரிய அளவிலான முதலை ஒன்று சுற்றித் திரிவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் ஏரிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் இருந்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்பேரில், சிதம்பரம் வனச்சரக அலுவலர் சக்தியவேல் தலைமையில் வனவர் பன்னீர்செல்வம், வன காப்பாளர்கள் அன்புமணி, ராம்குமார் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கருணாகரநல்லூர் கிராமத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக தேவன் ஏரியில் நீர்மட்டம் குறைக்கப்பட்டு, முதலைக்கான தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, சுமார் 10 அடி நீளமும் 180 கிலோ எடையும் கொண்ட ராட்சத முதலை ஏரியில் இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து வனத்துறையினர் பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் முதலையை பத்திரமாக பிடித்து மீட்டனர். பின்னர் அந்த முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விடுவித்தனர். முதலை பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேவன் ஏரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: