விருதுநகர், ஜூன் 24: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், குழுக்கடன் மற்றும் கல்விக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கி வருகிறது. இந்த கடனுதவி, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள்ளும், 18 வயது முதல் 60 வயது நிரம்பிய குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும். தனிநபர் தொழில் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ.1.25 லட்சம் வரை 7 சதவீதம் வட்டி விகிதத்திலும், ரூ.1.25 லட்சத்திற்கு மேல் ரூ.25 லட்சம் வரை 8 சதவீதம் வட்டி விகிதத்தில் 3 முதல் 6 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறுதொழில் மற்றும் வணிகம் செய்ய ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையும், ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் 2.5 முதல் 3 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் முடிந்திருக்க வேண்டும். இருபாலருக்கான சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு இக்கடனுதவி வழங்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க 7 சதவீத வட்டி விகிதத்தில் 3 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு கடனுதவி வழங்கப்படுகிறது. கல்விக்கடன் பெற, விண்ணப்பத்தாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
வருமான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், இக்கழக இணையதள முகவரியில் www.tabcedco.net பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் ஜாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
