சிவகாசி, ஜூன் 24: சிவகாசி மாநகராட்சி பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கவும், சுவரொட்டிகள் ஒட்டவும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகிறது. இதனால் பல நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக இந்த பிளக்ஸ் பேனர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதற வாய்ப்பு உள்ளது. முக்கிய நிகழ்ச்சிகளின் போது பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கவும், சுவரொட்டிகள் ஒட்டவும் கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சங்கீதா இன்பம் தலைமை வகித்தார். ஆணையாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி அதிகாரிகள், பிளக்ஸ் பேனர் தயாரிப்பவர்கள், அமைப்பாளர்கள் என 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநகர பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பிளக்ஸ் பேனர் வைக்க 3 நாட்கள் மட்டும் அனுமதிக்கப்படும். அதற்கு உரிய கட்டணம் வசூலிக்கப்படும். உரிய அனுமதி பெற்ற பின்னர் தான் பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வாசகங்கள் இல்லாத பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி மறுக்கப்படும். சுவரொட்டிகள் அடிக்கும் போது அச்சகத்தின் பெயர் இடம் பெற வேண்டும். அரசு அலுவலக சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
