புதிய அலுவலகங்கள் அமைக்க வேண்டிய இடங்கள் உள்பட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒரே நாளில் அனைத்து மண்டல அலுவலகங்கள் செயல்பட்டதாக அதிகாரிகள் தவறான அறிக்கை

* நெடுஞ்சாலைத்துறையில் பெரும் குளறுபடி: விதிக்கு புறம்பாக பொறியாளர்கள் பணியிடமாற்றம்

சென்னை: புதிய அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள், அலுவலக கட்டமைப்பு, பணியாளர் ஒதுக்கீடு, நிர்வாக அனுமதிகள், ஊதிய கணக்கு மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் எந்த தெளிவான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல், ஜூன் 15ம் தேதி ஒரே நாளில் அனைத்து மண்டல அலுவலகங்களும் செயல்பட தொடங்கிவிட்டதாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 13ம் தேதி நெடுஞ்சாலைத்துறை அரசாணை எண் 43 ஒன்றை வெளியிட்டது.

அந்த அரசாணைப்படி இதுவரை சென்னையில் மட்டும் செயல்பட்டு வந்த கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளர் அமைப்பை சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரித்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனுடன் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திட்ட அலகுகள், பெருநகர அலகுகள் ஆகியவற்றின் கட்டுமானம், பராமரிப்பு, தரக்கட்டுப்பாட்டு அலகுகளாக மறுசீரமைக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த அரசாணையின் படி உத்தரவிடப்பட்ட அனைத்தும் ஜூன் 15ம் தேதிக்குள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து அமலுக்கு வந்த நாள் வரை சுமார் 94 நாட்கள் கால அவகாசம் இருந்தபோதிலும், புதிய நிர்வாக அமைப்புக்கு தேவையான முன்னேற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது வலுத்து வருகிறது.

புதிய அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள், அலுவலக கட்டமைப்பு, பணியாளர் ஒதுக்கீடு, நிர்வாக அனுமதிகள், ஊதிய கணக்கு மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் எந்த தெளிவான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல், ஜூன் 15ம் தேதி ஒரே நாளில் அனைத்து மண்டல அலுவலகங்களும் செயல்பட தொடங்கிவிட்டதாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: காகிதத்தில் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் பல இடங்களில் இன்னும் அலுவலகங்களே இல்லை. குறிப்பாக, புதிய அலுவலகங்களில் பணிபுரிய வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கை என்ன, எந்த பதவிகள் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளன, எந்த நிர்வாக அலகின் கீழ் அவர்கள் செயல்பட வேண்டும் என்பதில் தெளிவான உத்தரவுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகுகளுக்கு ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட பல்வேறு பணியிடங்கள் உள்ள நிலையில், தற்போது இணைக்கப்பட்டுள்ள நபார்டு மற்றும் கிராமச்சாலை அலகுகளுக்கு அதே பணியிடங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டங்களில் கண்காணிப்பாளர் உள்ளிட்ட நிர்வாகப் பணியிடங்கள் உள்ள நிலையில், நபார்டு மற்றும் கிராமச்சாலை அலகுகளில் அத்தகைய பணியிடங்கள் இல்லாததால் புதிய நிர்வாக அமைப்பில் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் விளைவாக நேரடியாக ஊதிய வழங்கல் நடைமுறையிலும் எதிரொலிக்கும் அபாயம் இருப்பதாக பணியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக புதிய அலுவலகங்கள் உருவாக்கப்படும் போது அதற்கான பணியாளர் நிர்ணயம், நிதி ஒதுக்கீடு, கணக்கு குறியீடுகள் மற்றும் நிர்வாக ஒப்புதல்கள் வழங்கப்பட்ட பின்னரே ஊதியம் வழங்கப்படும். ஆனால் தற்போதைய சூழலில் அவ்வாறான நடைமுறைகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் புதிய அலுவலகங்கள் செயல்படுவதாக காட்டப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரியும் பணியாளர்களின் ஊதியம் தாமதமாகும் நிலை ஏற்படும்.

மதுரையில் செயல்பட்டு வந்த நெடுஞ்சாலைத் திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் தற்போது ராமநாதபுரம் தரக் கட்டுப்பாட்டு ஆய்வக வளாகத்தில் செயல்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் திருநெல்வேலியில் இருந்த கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் விருதுநகருக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அங்கு முழுமையான அலுவலக வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், பணியாளர்களுக்கு திடீர் இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டிருப்பது பொறியாளர்களிடையே பெரும் அதிருப்தியை அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றி வந்த சில அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மிகக்குறுகிய கால அவகாசத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பணியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குடும்ப சூழ்நிலை, குழந்தைகளின் கல்வி, உடல்நலத் தேவை போன்றவை கருத்தில் கொள்ளப்படாமல் இத்தகைய உத்தரவுகள் வழங்கப்பட்டதாக பொறியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், யாரும் மருத்துவ விடுப்பு எடுக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் பணியாளர்கள் மத்தியில் மன அழுத்தத்தை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: அரசாணை 43 வெளியிடப்பட்ட 13.3.2026 முதல் 14.6.2026 வரை தலைமைப் பொறியாளர் நிலையில் இருந்தவர்கள் இதை அமல்படுத்தாமல் உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ளனர் என தெரிய வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த அரசாணைக்கு சட்டரீதியாக எந்த தடையும் வழங்கவில்லை.

எனவே, 90 நாட்களுக்கும் மேலாக அவகாசம் இருந்தும் எந்த முயற்சியும் எடுக்காமல் 15.6.2026 அன்று ஒரே நாளில் அனைத்து அலுவலகமும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என அறிக்கை அனுப்புவது கேலிக்கூத்தாக தெரிகிறது. புதிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதியம் நான்கு மாதம் வரை காலதாமதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அரசாணையை அமல்படுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும். இந்த குளறுபடிகளுக்கு காரணமானவர்கள் மேல் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* பணியிட மாறுதல் கோரி யாரும் வராதீர்கள்
விருப்ப பணியிட மாறுதல் கோரி பலரும் முதன்மை இயக்குநர் நெடுஞ்சாலைத்துறை சென்னை அலுவலகத்திற்கு நேரில் வருவதை தவிர்த்து, நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களில் விருப்ப பணியிட மாறுதல் கோருபவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வரையறுக்கப்பட்ட படிவத்தின்படி dghtransfer@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைத்திட வேண்டும். நேரில் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: