புதுகை அருகே மின்தடை நேரத்தில் வீடு புகுந்து சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் 8 பவுன் நகை, ரூ.30,000 பறிப்பு: 7 பேர் முகமூடி கும்பல் துணிகரம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மின்தடை நேரத்தில் முகமூடி அணிந்த மர்மநபர்கள் வீடு புகுந்து சிறுவன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் 8 பவுன் நகை, ரூ.30,000 ரொக்கத்தை பறித்து சென்றனர்.  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த பள்ளத்தி விடுதியை சேர்ந்தவர் நீலகண்டன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வித்யா (35). இவர்களுக்கு 13, 11 வயதில் 2 மகன்கள் உள்ளனர். அம்புலி ஆற்றுப்பாலம் அருகே புதிதாக வீடுகட்டி வித்யா 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு மூத்த மகன் டியூசன் சென்று விட்டான். இதனால் இளைய மகனுடன் வித்தியா வீட்டில் இருந்தார். அப்போது இரவு 8 மணி அளவில் சாரல் மழை பெய்ததால் மின்சாரம் தடைபட்டது. அப்போது இருட்டை பயன்படுத்தி முகமூடி அணிந்த 7 பேர் கும்பல் வீட்டிற்குள் புகுந்து, சிறுவன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வித்யாவிடம் நகை, பணத்தை கேட்டனர்.

வித்யா மறுத்ததால் ஆலங்குடிக்கு டியூசன் சென்றுள்ள மூத்த மகனயைும் தூக்கி கழுத்தை அறுத்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால் பயந்த வித்யாவிடமிருந்து 8 பவுன் நகைகள், ரூ.30,000 ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு வித்யாவை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்து எடுத்து கொண்டு தப்பி சென்றனர். மர்ம நபர்கள் சென்றதும் வித்யா வீட்டுக்குள் இருந்து சத்தம் போட்டார்.

இந்த சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் கதவை திறந்து விட்டனர். இந்த கொள்ளை சம்பவம் தகவலறிந்து எஸ்பி ரவீந்திர குமார் குப்தா மற்றும் ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்து 7 பேர் கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories: