மது அருந்துவது தான் நவீன பெண்மையா?: நடிகை ஷில்பா ஷிண்டே காட்டம்

மும்பை: நவீன பெண்ணியம் என்பது ஆடை மற்றும் பழக்க வழக்கங்களில் இல்லை என நடிகை ஷில்பா ஷிண்டே கூறியுள்ளார். நவீனத்துவம் மற்றும் பெண்மை குறித்த தனது கருத்துகளை நடிகை ஷில்பா ஷிண்டே பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உண்மையான அதிகாரமளித்தல் என்பது ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை, மதிப்பீடுகள் மற்றும் சுய விழிப்புணர்வில் இருந்துதான் உருவாகிறதே தவிர, நவீனத்துவம் என்ற பெயரில் சிகரெட் பிடிப்பதாலோ அல்லது கவர்ச்சியான ஆடைகளை அணிவதாலோ கிடைப்பதல்ல.

சொல்லப்போனால் சில தனிப்பட்ட நம்பிக்கைகளில் நான் கொஞ்சம் பழமைவாத சிந்தனை கொண்டவள். பெண்கள் புகைப்பிடிப்பதை நாகரிகம் என்று கருதுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. துணிச்சல் என்பது முற்றிலும் வேறுபட்டது. ஒருவர் புகைப்பிடிப்பதாலோ, மது அருந்துவதாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட வகையிலான ஆடையை அணிவதாலோ அவர் துணிச்சலானவர் ஆகிவிட முடியாது’ என்று தெரிவித்தார். இந்த உரையாடலின் போது நடிகை பர்வீன் தஸ்தூர், சுடிதார் அணிந்திருக்கும் இளம் பெண்கள் கூட பான் கடைகளில் நின்று புகைப்பிடிப்பதைச் சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த ஷில்பா ஷிண்டே, ‘ஆடைகளும் மனநிலையும் முற்றிலும் மாறுபட்டவை. பெண்கள் புடவை அணிவதை விரும்புகிறேன்.

ஒரு பெண் தன்னைப் பற்றியும், தனது மதிப்பீடுகள் குறித்தும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். குட்டையான ஆடைகளை அணிந்தால் துணிச்சலாகத் தெரிவோம் என்று பல பெண்கள் நினைக்கிறார்கள்; ஆனால் அது உண்மையில்லை. புடவையோ அல்லது நவீன உடையோ, நீங்கள் எதை வேண்டுமானாலும் அணியலாம். உங்கள் ஆடைகள் உங்கள் மனநிலையைத் தீர்மானிப்பதில்லை. பெண்மை என்பது ஒருவரது மதிப்பீடுகளைத் தன்னம்பிக்கையுடன் சுமந்து செல்வதாகும்; வெளித்தோற்றத்தை வைத்துப் பெண்மையை எடைபோடக் கூடாது’ என்று கூறியுள்ளார்.

Related Stories: