கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக மம்தா பானர்ஜி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிருப்தி குழுவினர் அறிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் ஆட்சியை பறிகொடுத்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது. நேற்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி குழுவினர் கொல்கத்தாவில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
அந்தக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனரும் மேற்குவங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியை தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். அவருக்குப் பதிலாக அரூப் ராய் கட்சியின் புதிய தலைவராக ஒருமனதாக நியமிக்கப்பட்டார். மம்தா பானர்ஜியின் நீண்டகால அரசியல் பயணத்தில் அவரது அதிகாரத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக இருக்கும் விசுவாசிகள் அணி தற்போது கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இது குறித்து அக்கட்சியின் எம்எல்ஏ குணால் கோஷ் கூறுகையில், ‘அதிருப்தி குழுவினர் நடத்தியது வெறும் ‘காமெடி ஷோ’ மற்றும் ‘சர்க்கஸ்’ போன்றது. மம்தா பானர்ஜி இல்லாமல் திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியே கிடையாது. அவரே இப்போதும் கட்சியின் உண்மையான தலைவர். சட்டத்தின் முன் இந்தச் செயல்கள் செல்லாது என்பதால், நீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்’’ என்று தெரிவித்தார். மேலும், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட அரூப் ராய், பிர்ஹாத் ஹக்கீம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் தாங்கள் தான் என்று உரிமை கொண்டாடி வரும் அதிருப்தி குழுவினர், கட்சியின் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்தை அணுகத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், மம்தா பானர்ஜி தரப்பினர் காளிகாட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மம்தா தலைமையிலான பழைய அமைப்பே சட்டப்பூர்வமானது என்றும் அவர்கள் வாதிட்டு வருகின்றனர். மேற்கு வங்க அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிகாரப் போர், அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
