பண்ணாரி வனப்பகுதியில் இறந்த நாயை கவ்விச்சென்ற கழுதை புலிகள்

*வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சத்தியமங்கலம் : பண்ணாரி வனப்பகுதி சாலையோரத்தில் இறந்த கிடந்த நாயை கழுதை புலிகள் கவ்விச்சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அரிய வகை வன விலங்கான கழுதைப்புலிகள் நடமாட்டம் உள்ளது.

பவானிசாகர் வனச்சரகத்தில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் வனப்பகுதியில் கழுதைப்புலிகள் நடமாட்டம் இருந்த நிலையில் தற்போது பண்ணாரி வனப் பகுதியிலும் கழுதைப்புலிகள் தென்படுகின்றன.

இந்தநிலையில் நேற்று இரவு பண்ணாரி அம்மன் கோயில் அருகே பவானிசாகர் செல்லும் வனச்சாலை ஓரத்தில் தெருநாய் ஒன்று இறந்து கிடந்தது. இதனை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கழுதைப்புலி கவ்விக்கொண்டு மீண்டும் வனப்பகுதிக்குள் எடுத்துச் செல்வதை அவ்வழியாக காரில் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நாயின் உடலை கவ்விச் சென்ற கழுதைப்புலி ஓரிடத்தில் வைத்து அதை உண்ண முற்பட்டபோது அந்த இடத்திற்கு இன்னொரு கழுதை புலி வந்தது.

இரு கழுதைப் புலிகளும் சேர்ந்து இறந்த நாயின் உடலில் இருந்து இறைச்சியை கவ்வி உண்ணத் தொடங்கின. கழுதைப்புலிகள் சாலையோரம் வனப்பகுதியில் நடமாடுவதைக் கண்டு பயணிகள் அச்சம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் சாலையோரம் வனவிலங்குகள் நடமாடும் போது அருகே செல்லக் கூடாது என பயணிகளிடம் அறிவுறுத்தினர். பண்ணாரி அம்மன் கோவில் அருகே கழுதைப்புலிகள் நடமாடிய சம்பவம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: