* முறையாக பதிலளிக்காமல் ஊழியர்கள் அலட்சியம்
* இந்தி மட்டுமே பேசும் சிஐஎஸ்எப் வீரர்கள்
சென்னை: சென்னை உள்நாட்டு விமான பயணிகள் விமானம் புறப்படுவதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து, போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு, பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு முன்னதாக, விமானங்களில் ஏறுவதற்கான, போர்டிங் கேட்டிற்கு சென்று விட வேண்டும். அதன்பின்பு அந்த கேட் மூடப்பட்டு விடும். தாமதமாக வரும் பயணிகள், விமானத்திற்கு ஏறுவதற்கு செல்ல முடியாது. அவ்வாறு தாமதமான பயணிகள், ஆப்லோடு செய்யப்படுவார்கள். அந்த பயணிகள் அந்த இடத்தில் இருந்து வெளியில் வந்து, அவர்கள் பயணிக்க இருந்த விமான நிறுவன கவுன்டர் சென்று, அடுத்த விமானத்தில் பயணிப்பதற்காக, விமான டிக்கெட்களை மாற்றம் செய்வது போன்றவைகளில் ஈடுபடலாம் என்ற விதிமுறைகள் உள்ளன.
ஆனால் அவ்வாறு ஆப்லோடு செய்யப்படும் பயணிகள், எந்த வழியாக வெளியே செல்ல வேண்டும் எந்த கவுன்டரில் சென்று, தங்களது ஆப்லோடாகிய போர்டிங் பாஸை காட்டி, மீண்டும் பயணிக்க, எவ்வாறு பயணத்தை மாற்ற வேண்டும் என்ற விதிமுறைகளை பயணிகளுக்கு விமான நிலையத்தில் உள்ள விமான நிறுவனம், அங்குள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளோ அல்லது விமான நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட யாரும் சரிவர சொல்வது கிடையாது. இதற்கு முக்கிய காரணம், அங்கு பணியில் உள்ள தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பலருக்கு இந்தி தவிர வேறு மொழி, குறிப்பாக ஆங்கிலம் கூட தெரிவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பயணிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் மவுனம் சாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், விமான நிறுவனங்களில் ஊழியர்களும் பயணிகளுக்கு சரிவர எந்த பதிலும் கூறாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் தினமும் பல பயணிகள் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்திற்கு பயணம் செய்ய வரும் பயணிகள் மிகுந்த அச்சம், பீதி அடையும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், நேற்று முன்தினம் காலை, பிரபல தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டார். அவர் சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், பெங்களூரு வழியாக கொச்சி செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்தார்.
பாதுகாப்பு சோதனை பிரிவில், மருத்துவராகிய அவர் வைத்திருந்த டெலஸ்கோப்பை, துருவி துருவி, நீண்ட நேரம் சோதனை நடத்தியதால், பாதுகாப்பு சோதனை தாமதமாகி உள்ளது. அதன்பின்பு பாதுகாப்பு சோதனை முடித்துவிட்டு, விமானத்தின் ஏறுவதற்கான போர்டிங் கேட்டிற்கு சென்ற போது, கேட் மூடி, ஒரு நிமிடம் ஆகிவிட்டது. அனைத்தும் கம்ப்யூட்டர் முறையில் இயங்குவதால், எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று அங்கு பணியில் இருந்த விமான நிறுவன ஊழியர் கூறிவிட்டார். அதோடு அவரை ஆப்லோடு செய்து, அனுப்பினார். ஆனால் அவர் எந்த வழியாக வெளியில் சென்று, அடுத்த விமானத்தில் பயணிப்பதற்கான, பயணத்தை பதிவு செய்ய வேண்டும்? அதற்காக யாரை அணுக வேண்டும்? என்ற முறையான தகவல்கள் எதுவும் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மருத்துவரான அந்த பயணி நீண்ட நேரம், சென்னை விமான நிலையத்திற்குள், அங்கும் இங்கும் அலைந்து தாமதமாக, வேறு விமானத்தில் பயணம் செய்துள்ளார். ஒரு மருத்துவரான பயணிக்கே இந்த நிலை என்றால், சாதாரண பயணிகள், படிப்பறிவு குறைவான பயணிகள் நிலை குறித்து, கேட்க வேண்டியதே இல்லை. அதுபோல் சென்னை விமான நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் பெரும் அவதி அடைந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் பெரும்பாலான பயணிகள் குறுகிய தூர பயணங்களுக்கு விமான பயணங்களை தவிர்த்து, ரயில் கார் போன்றவைகளை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்கு, சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு முறையான வழிகாட்டிகள் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக விமான நிலையத்தில் உள்பகுதியில் பணியில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் ஆங்கிலம், மாநில மொழியான தமிழ் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அதோடு பயணிகள் கேட்கும் எந்த விளக்கங்களுக்கும் முறையாக பதில் அளிக்க அவ்வப்போது சிறப்பு பயிற்சிகளும் அளிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர். இதுபோன்ற காரணங்களால், சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்காமல், படிப்படியாக குறைந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
