×

நிலக்கோட்டை அருகே விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்க தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்

*பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் மணிமேகலை (35). இவர் நேற்று மதியம் சிலுக்குவார்பட்டியில் இருந்து சின்னாளபட்டிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

கொடைரோடு அருகே மாலையகவுண்டன்பட்டி பிரிவு அருகே வந்த போது மணிமேகலைக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு டூவீலரிலிருந்து தவறி சாலையில் விழுந்துள்ளார். இதில் மணிமேகலைக்கு பின்தலை, முகம், இடது கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்து ரத்தம் அதிகமாக வெளியேறியது.

இதனால் மயக்க நிலைக்கு சென்ற மணிமேகலையை அவ்வழியாக வந்தவர்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி சாலையோரம் அமர வைத்து 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். அப்போது அம்மையநாயக்கனூர் அரசு சமுதாய நல மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் நிலக்கோட்டையில் இருந்து அனுப்புவதாக கூறினர்.

ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. பின்னர் கடுமையான வெயிலில் அதிக ரத்தம் வெளியேறிய நிலையிலிருந்த மணிமேகலையை அங்கிருந்தவர்களே மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோவில் ஏற்றி அம்மையநாயக்கனூர் அரசு சமுதாய நல மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே ஒரு மணிநேரத்திற்கு பின் வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனருடன் அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் விபத்து நடந்து ஒரு மணிநேரமாகியும் அருகில் இருந்த அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திலிருந்து ஒரு காவலர் கூட வரவில்லை என அங்கிருந்தவர்கள் குற்றம்சாட்டினர்.

ஆம்புலன்ஸ் வசதி உடனே தேவை

நிலக்கோட்டை பேரூராட்சி, 5 ஊராட்சிகள் மற்றும் அதில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலையிலே பயணிக்கின்றனர். மேலும் இந்த நான்கு வழிச்சாலையில் தினந்தோறும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் விபத்துகள் நடக்கும் போது அவசரத்திற்கு வர ஒரு ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லை. எனவே அம்மையநாயக்கனூர் அரசு சமுதாய நல மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nilakottai ,Manimekalai ,Silukkuvarpatti ,Chinnalapatti ,Maliagaundanpatti ,Kodai Road ,
× RELATED பள்ளி கல்வித் துறையில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது: அன்புமணி