×

நீட் மறுதேர்வில் முறைகேடு; ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 30 பேர் பீகாரில் கைது: செல்போனுடன் பிடிபட்ட பெண் சிறையில் அடைப்பு

 

லகிசராய்: நீட் மறுதேர்வின் போது செல்போனுடன் பிடிபட்ட பெண் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் பீகாரில் ஆள்மாறாட்ட முறைகேட்டில் ஈடுபடுவதற்கு முயன்ற 30 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் நீட் தேர்வில் முறைகேடு புகார்கள் எழுந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நேற்று முன்தினம் நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் நீட் மறுதேர்வின் போது, பல்வேறு மையங்களில் முறைகேடுகள் நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சரிபார்ப்பு நடைமுறையில் முறைகேடு செய்து போலித் தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களுடன் கூட்டுச் சேர்ந்ததாக கூறப்படும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு அமைப்புடன் தொடர்புடைய 18 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் லகிசராய் பகுதியில் பதிவு செய்யப்பட்ட தேர்வர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக கூறப்படும் 10 போலித் தேர்வர்களும் பிடிபட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ கல்லூரி மாணவர்கள். நர்சிங் மாணவி ஒருவரும், ஆயுர்வேத மருத்துவம் படித்து வரும் ஒருவரும் சிக்கினர்.

கயா மருத்துவக்கல்லூரியை சேர்ந்த இடைத்தரகர் என்று கூறப்படும் அங்கித் ராஜ் என்பவரையும் போலீசார் பிடித்ததாக தெரிவித்துள்ளனர். இது தவிர தேர்வில் முறைகேடு செய்ததாக நளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சித் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பிண்டாயகா பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வின்போது பெண் தேர்வர் ஒருவர் செல்போனை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. சந்தேகம் அடைந்த தேர்வு கண்காணிப்பாளர்கள் அவரை சோதனை செய்தபோது அவர் சட்டையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த செல்போன் கைப்பற்றப்பட்டது.

விசாரணையில் அவர், பிரேம் நகர் குர்ஜார் கி தாடியை சேர்ந்த ஹிமான்ஷி திவாரி என்று அடையாளம் காணப்பட்டது. மேலும் இவர் ஏஐ உதவியுடன் விடைகளை தேடுவதற்காக அந்த செல்போனை கொண்டு வந்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். அந்த செல்போன் கைப்பற்றப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விடைகளை தேடுவதற்கு மட்டுமே அந்த செல்போன் பயன்படுத்தப்பட்டதா அல்லது வினாத்தாள் விவரங்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்டதா என்பதை அறிவதற்கு இந்த சோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

தடயவியல் அறிக்கையை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முறைகேடான வழிமுறைகளை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

Tags : NEET ,Bihar ,Lakhisarai ,
× RELATED நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவு...