சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விரைவில் தவெக ஆட்சி கவிழும். விபத்தால் வந்த ஆட்சியை மக்கள் அகற்ற தயாராக உள்ளனர். தவெக ஆட்சிக்கு வந்து 40 நாட்கள் ஆகிறது. தினம்தினம் பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. போதை பொருட்கள் தலைவிரித்து ஆடி வருகிறது. தவெக அமைச்சருக்கு நெருங்கியவர்கள்தான் போதை பொருட்கள் கடத்தி வருகின்றனர்.
மின்வெட்டு காரணமாக மக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.20 கோடி கொடுத்து ராஜ்யசபா பதவி வாங்க வேண்டும் என்ற எண்ணமோ, அவசியமோ எங்களுக்கு இல்லை. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலிருந்தே விசுவாசமாக இருந்ததால் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் சொல்வதுபோல் நான் எங்கு, யாரிடம் ரூ.20 கோடி கொடுத்தேன் என்பதை நிரூபிக்க வேண்டும்.
மரகதம் குமரவேல் அரசியலில் முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார். மேலும், மதுராந்தகத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் ஆறுமுகம், தான் அப்படி ரூ.50 லட்சம் வாங்கியதை ஆதாரத்துடன் நிரூபித்தால், நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள தயார் என மேடையிலேயே பேசிவிட்டார். அதுபோன்று நடந்து இருந்தாலோ, ஆதாரம் இருந்தாலோதானே வெளியிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
