ஈரோடு, ஜூன் 22: ஈரோடு அடுத்த கருப்பன் கவுண்டன்புதூரில் உள்ள பொதுக்கழிப்பிடம் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பு ஓடை அடுத்த கருப்பன் கவுண்டன்புதூரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள், திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்தி வந்ததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும், இரவு நேரங்களில் மலம் கழிக்க செல்பவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது.
இதனால், அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், தற்போது, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக, கழிவறையில் இருப்பவர்கள் வெளியே தெரியும் அளவிற்கு கதவுகள் சேதம் அடைந்த நிலையில் இருப்பதால், இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் அருவருப்பாகவும், முகம் சுளிக்கும் வகையிலும் பயன்படுத்தி வருகின்றன. இதனால், இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம், சேதம் அடைந்த நிலையில் உள்ள கழிவறை கட்டிடத்தின் கதவுகள், தரைத்தளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
