×

குன்னூர் அருகே பரபரப்பு; ‘டாஸ்மாக் கடையை மாற்றாதீங்க…’ கண்ணீருடன் மதுபிரியர்கள் மனு: வீடியோ வைரல்

 

குன்னூர்: குன்னூர் அருகே டாஸ்மாக் கடையை மாற்றாதீங்க எனக் கூறி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மதுபிரியர்கள் கண்ணீர் மல்க மனு அளித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலானது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ளதால், பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக இருப்பதாகக் கூறி, கடையை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ​கடையை அகற்றக்கோரி அடுத்த மாதம் ஜூலை 5ம் தேதி, சுமார் 20 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகப் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

​பொதுமக்கள் தரப்பில் கடைக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த டாஸ்மாக் கடையை அப்பகுதியிலிருந்து மாற்றக்கூடாது என வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட மதுபிரியர்கள் நேற்று திரண்டனர். ​அவர்கள் குன்னூர் டாஸ்மாக் மதுபானக் கிடங்கு மேலாளரிடமும், தொடர்ந்து குன்னூர் சார் ஆட்சியர் அலுவலகத்திலும் கடையைத் தக்க வைக்கக் கோரி மனு அளித்தனர். ​அப்போது அவர்கள், இந்த கடையை மாற்றக்கூடாது என்ற கண்ணீர் மல்கவும், கைகளைக் கூப்பியும் அதிகாரிகளிடம் உருக்கமாகப் பேசினர். ‘‘நாங்கள் கூலி வேலைக்குச் செல்லும் சாமானியர்கள்.

மது அருந்திவிட்டு, மீதித் தொகையை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறோம். இந்த கடையை அகற்றினால் நாங்கள் பாதிக்கப்படுவோம்’’ என்று அவர்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Gunnar ,Tasmac ,Madhupriyrians ,Ruler ,Tasmak ,Vandichola ,Nilgiri District Kunnur ,
× RELATED திருவள்ளூரில் இறால் தொழிற்சாலையில்...