×

கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் மறுதேர்வு: 5,440 மையங்களில் 22.8 லட்சம் பேர் பங்கேற்பு!

 

டெல்லி: நாடு முழுவதும் இன்று கடும் கட்டுப்பாடுகளுடனும் பலத்த பாதுகாப்புடனும் நீட் மறுதேர்வு நடைபெற்று வருகிறது. 22.8 லட்சம் பேர் பங்கேற்றனர். கடந்த மே மாதம் 3ம் தேதி நாடு முழுவதும் நடந்த இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு காரணமாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அந்தத் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிந்த புகார்கள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 2026ம் ஆண்டுக்கான நீட் மறுதேர்வை பலத்த பாதுகாப்புடன் நடத்த தேசிய தேர்வு முகமை முடிவெடுத்தது.

அதன்படி, இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நாடு முழுவதும் 551 நகரங்களில் உள்ள 5,440 தேர்வு மையங்களில் நீட் மறுதேர்வு பலத்த பாதுகாப்புடன் நடந்தது. முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் 1.4 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 51,311 ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 95,000 தேர்வு அறைகளிலும் நடக்கும் காட்சிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அதிகாரிகள் நேரலையாகக் கண்காணித்தனர். மேலும் 48,448 பயோமெட்ரிக் பணியாளர்கள் மற்றும் 38,795 சோதனை பணியாளர்கள் மாணவர்களின் அடையாளங்களைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வினாத்தாள்கள் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இத்தேர்வில் மொத்தம் 22.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 18 லட்சம் பேர் ஆங்கிலத்திலும், 3.5 லட்சம் பேர் இந்தியிலும் தேர்வு எழுதுகின்றனர். மாநில வாரியாக உத்தரப்பிரதேசத்தில் 3.6 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 2.2 லட்சம் பேரும், கர்நாடகாவில் 1.5 லட்சம் பேரும் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் 307 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 489 மாணவ- மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

எந்த முறைகேடுக்கும் இடம் இல்லாமல், தேர்வை சரியாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தலைமைச்செயலாளர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். வெளிநாடுகளில் உள்ள 14 மையங்களிலும் இந்தத் தேர்வு நடைபெற்று வருகிறது. கோடை வெப்பத்தைக் கருத்தில் கொண்டு தேர்வு மையங்களில் குடிநீர், ஓஆர்எஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற்ற இந்தத் தேர்வுக்கு, மாணவர்கள் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணிக்குள் மையத்திற்கு வந்தனர். மதியம் 1.30 மணிக்கு மேல் கேட்கள் மூடப்பட்டன. அதன் பிறகு தேர்வர் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

ஆடை கட்டுப்பாடுகளின்படி, மாணவர்கள் அரைக்கை சட்டை மற்றும் செருப்பு மட்டுமே அணிய அனுமதிக்கப்பட்டனர். ஷூ, பூட்ஸ், முழுக்கை சட்டை மற்றும் எவ்வித உலோக நகைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அவ்வாறு அணிந்து வந்த சிலரை கடுமையாக சோதனைக்கு அதிகாரிகள் உட்படுத்தினர். தேர்வு மையத்திற்குள் செல்போன், லேப்டாப், ப்ளூடூத் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் தனிப்பட்ட ஸ்டேஷனரி பொருட்கள் கொண்டு செல்லத் தடை செய்யப்பட்டது. மாணவர்கள் ஹால் டிக்கெட், ஒரிஜினல் அடையாள அட்டை மற்றும் புகைப்படங்களை மட்டுமே வெளிப்படையான பையில் எடுத்துச் சென்றனர். கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Tags : Delhi ,NEET re-election ,Nationwide Junior Neat Exam ,
× RELATED சென்னை அருகே இறால் பதப்படுத்தும்...