மதுரை அரசு மருத்துவமனையில் நெருக்கடியால் படுக்கையின்றி பரிதவிக்கும் புற்றுநோயாளிகள்

 

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் புற்று நோயாளிகள், படுக்கைகள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் படிக்கட்டுகளில் அமர்ந்தும், பாதையில் படுத்தும் பரிதாபத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மைய மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவிற்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை,நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 3 மாடிகள் கொண்ட இப்பிரிவில், இரு அறுவை சிகிச்சை அரங்குகள், 120 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இதில் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு 80 சதவீத படுக்கைகள் ஒதுக்கப்பட்டது போக, புற்றுநோயின் பிற பாதிப்புகளுடனும், கீமோ உள்ளிட்ட சிகிச்சைக்கும் வருவோருக்கு படுக்கைகள் ஒதுக்க முடியவில்லை.

தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் இந்த ஒற்றைக் கட்டிடத்தில் குவிகின்றனர். இதுதவிர நோயாளிகளுடன் வருவோர் எண்ணிக்கையும் அதிகம். இவர்களுக்கான எந்த அடிப்படை வசதிகளுமின்றி தினந்தோறும் கடும் நெரிசலும், பெரும் தவிப்பும் தொடர்கிறது. இந்த புற்றுநோய் பிரிவு கட்டிடம் கட்டி 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அறுவை சிகிச்சை அரங்கில் சுவர்கள் பெயர்ந்து விழுகின்றன. படுக்கைகளின்றி தரையில் நோயாளிகள் புற்றுநோயின் வலி, வேதனையுடன் கிடப்பது காண்போரை கண் கலங்கச் செய்கிறது. கதிர்வீச்சு சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு வரும் நோயாளிகளில் சிலரை மதுரை பாலரங்காபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோதும், புற்றுநோய்க்கான முக்கிய மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் இந்த மைய மருத்துவமனையில்தான் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் கடும் இட நெருக்கடியுடன், நோயாளிகள் படும் அவஸ்தை வேதனை தருகிறது. சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘புற்றுநோய் சிகிச்சை மையம் பழைய கட்டிடத்தில் மிகுந்த நெருக்கடியுடன் செயல்படுகிறது. நோயாளிகளுக்கான படுக்கைகள், அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் தொடர் சிகிச்சை நோயாளிகளுக்கு கிடைக்கவில்லை. ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்திற்கு மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்த பைல்கள் மாவட்ட, மாநகராட்சி, சுகாதாரத்துறை அலுவலகங்களில் தூங்குகிறது. இந்த காலதாமதத்தை கருத்தில் கொண்டு, புற்றுநோய் சிகிச்சை பிரிவின் அருகில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்ததை, கூடுதல் புற்றுநோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் புற்றுநோய் பிரிவின் 2வது யூனிட்டாக ஒதுக்கித் தர வேண்டும்.

மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கட்டுமானம் கண்டுள்ள குழந்தைகள் நலப்பிரிவு புதிய கட்டிடத்திற்கு, மைய மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவை மாற்ற வேண்டும். புற்றுநோய் பாதித்து வாழ்க்கையை மிகுந்த வேதனையுடன் கழித்து வருவோர் மகிழ்வுடன் சிகிச்சை பெறும் வகையில், புதிய கட்டுமானம் நடைபெறும் வரை, கூடுதல் கட்டிடத்தில் படுக்கைகள் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசும், மருத்துவமனை நிர்வாகமும் செய்து தருவது கடமை’ என்றனர்.

Related Stories: