வாஷிங்டன்: ஆக்சியோஸ் தொலைக்காட்சி சேனலுக்கு அதிபர் டிரம்ப் பேட்டியளித்தார்.அப்போது அதிகாரம், செல்வாக்கு மற்றும் அதைச் செயல்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில்,நீங்கள் விரும்பும் இரண்டு முக்கிய தலைவர்கள் யார் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த டிரம்ப்,சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் மோடி ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டார். தொடர்ந்து மோடி கூறியதாவது:
மோடி மிகவும் சிறந்தவர் என்று நான் நினைக்கிறேன். அவர் போர்களில் இருந்து விலகி இருக்கிறார், அது ஒரு புத்திசாலித்தனமான செயல். அவர் 150 கோடி மக்களின் பிரதிநிதி. உண்மையில் அவர்தான் மிகப்பெரியவர். இந்தியாதான் உண்மையில் மிகப்பெரியது. முன்னர் நம்மை ஏமாற்றி வந்த இந்தியாவுடன்,அமெரிக்கா அதிக அளவில் வர்த்தகம் செய்தது. நாங்கள் அவர்களுடன் நிறைய வணிகம் செய்கிறோம், ஆனால் இப்போது நேர்மையாக வணிகம் செய்கிறோம். முன்பு அவர்கள் எங்களை நன்றாகவே ஏமாற்றி வந்தார்கள். அதற்காக நான் அவர்களைக் குறை சொல்லவில்லை. அப்படி நடக்க அனுமதித்த முட்டாள் அரசியல்வாதிகள் நமக்கு(அமெரிக்கா) இருந்தார்கள். ஆனால் இப்போது நாங்கள் நிறைய வணிகம் செய்கிறோம்.
அவர்கள் இதனால் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை, ஏனென்றால் முன்பு அவர்கள் இதைவிட சிறப்பாகச் செயல்பட்டு வந்தார்கள். எனவே மோடி சிறந்தவர். சீன அதிபர் ஜின்பிங்க் மிகுந்த தகுதியும் நம்பிக்கையும் கொண்ட தலைவர். அவர்களில் யாரைப் பற்றியாவது நீங்கள் ஒரு திரைப்படம் எடுக்கப் போனால், ஹாலிவுட்டில் அந்த மனிதரைக் கண்டுபிடிக்கவே முடியாது. மோடி மிகவும் வித்தியாசமானவர். மிகவும் மதிக்கப்படுபவர். உண்மையான மோடி மிகவும் உறுதியானவர் என்பது எனக்குத் தெரியும்.
பல ஆண்டுகளாக இந்தியாவைக் கவனித்து வருகிறேன். தலைவர்கள் அடிக்கடி மாறுவதைக் கண்டிருக்கிறேன். யாராவது ஒருவர் ஆறு மாதங்கள், பிறகு ஒரு வருடம் பதவியில் இருப்பார்கள். ஆனால் திடீரென்று, பிரதமர் மோடி அந்தப் பதவிக்கு வந்தார்; அவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் உறுதியாகப் பதவியில் இருக்கிறார். அவர் அதை ஒருவித மிகுந்த அமைதியுடன் செய்கிறார். ஆனாலும் அவர் ஒரு அமைதியான நபர் அல்ல, அவர் மிகவும் கடுமையானவர். இவ்வாறு டிரம்ப் கூறினார். பேட்டியில், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் போன்றவர்களை தனக்கு பிடித்த தலைவர்களாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
