நாடு முழுவதும் இதுவரை 70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன: பிரதமர் மோடி தகவல்

 

புதுடெல்லி: நாடு முழுவதும் இதுவரை 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். முதல் முறையாகப் பணியில் சேரும் 15 லட்சம் ஊழியர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களுக்கான ரூ. 2,400 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பிரதமர் மோடி இதை தொடங்கி வைத்தார். இந்தத் தொகை பயனாளிகளுக்கு நேரடிப் பயன் பரிமாற்ற முறை மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி கூறியதாவது: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் தொழில் துறை ஆகியவை இணைந்து செயல்படும்போது, ​​வேலைவாய்ப்பு உருவாக்கம் பல மடங்கு அதிகரிக்கிறது.

பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டம் 70 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்கள் அல்லது முதலாளிகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. முதல் முறையாக வேலை தேடுபவர்களுக்கும் தொழில் துறைக்கும் இடையே இத்திட்டம் ஒரு பாலமாக அமைகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசாங்கம் ரூ. 99,446 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதுடன், இரண்டு ஆண்டுகளில் 3.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இலக்கையும் நிர்ணயித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு ரூ. 15,000 வரை வழங்கப்படுகிறது. அதேவேளையில், புதிய ஊழியர் ஒருவருக்கு மாதம் ரூ. 3,000 வரை நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Stories: