புதுடெல்லி: ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி நேற்று தனது 56வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு கட்சி தலைவர்களும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரதமர் மோடி தனது சமூக வலைதள பதிவில்,” மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தளத்தில் ” மக்களுடனான நேரடித் தொடர்பு மற்றும் அதிகாரத்திடம் உண்மையை உரக்கச் சொல்லும் துணிச்சல் ஆகியவற்றின் மூலம் மிகவும் நலிந்த மற்றும் விளிம்பு நிலை மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதற்காக ராகுல்காந்திக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் சேவையில் ஈடுபடும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வலிமை மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்” என்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஒன்றிணைந்து போராடுவோம்: மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் அழைப்பு
தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிணைந்து போராடுவோம் என்று ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: மு.க. ஸ்டாலின் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. ‘இந்தியா’ எனும் கோட்பாடு, நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றைக் காப்பதில் நாம் கொண்டுள்ள கூட்டு உறுதிப்பாடு தொடர்ந்து நமக்கு வழிகாட்டும்;
இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காப்பதற்கான போராட்டம்; வெற்றி பெறும் வரை நாம் இதனை ஒன்றிணைந்து முன்னெடுப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார். அதே போல் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி வெளியிட்ட பதிவு: விஜய் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான பற்றிலும், நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் நாங்கள் உறுதியுடன் இணைந்து நிற்கிறோம்; அத்துடன், தமிழ்நாடு மக்களின் நலன், கண்ணியம் மற்றும் அபிலாஷைகளுக்காகத் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
