புதுடெல்லி: தமிழ்நாடு சட்டபேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க தவெக கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டு பல்வேறு கட்சி எம்.எல்ஏக்களை விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார் அதில், ” த.வெ.க கட்சி சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அதிமுகவின் ஒரு பிரிவினருக்கு உட்பட பிற கட்சியினர் வாக்களிக்க அமைச்சர் பதவி தருவதாகவும், அதேப்போன்று ஆயிரம் கோடி அளவுக்கு டெண்டர் வழங்குவதாகவும் லஞ்சமாக பேசப்பட்டுள்ளது.
அதாவது குதிரை பேரம் நடத்தியே இத்தனை உறுப்பினர்களின் ஆதரவை தமிழக வெற்றி கழகம் பெற்றுள்ளது. அதனால் இவ்வாறு முறைகேடாகவும், குதிரை பேரம் நடத்தியும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளதால் தமிழக சட்டமன்றத்தை கலைக்க உத்தரவிட வேண்டும். மேலும் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேப்போன்று இந்த வழக்கில் ஒரு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் குடியரசு தலைவர் ஆட்சியை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் ” இதுபோன்ற வழக்கை நேரடியாக உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது. குறிப்பாக இந்த விவகாரத்தில் மனுதாரர் தாக்கல் செய்துள்ள வழக்கில் போதுமான ஆதாரங்கள் கொண்ட ஆவணங்கள் எதுவும் கிடையாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தார்.
