விவசாய பணிகளிலும் களம் இறங்கிய வடமாநிலத்தினர்

*வேலை இழக்கும் உள்ளூர் தொழிலாளர்கள்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு மற்றும் நெகமம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தென்னை நார் தொழிற்சாலை, பனியன் கம்பெனி, நூல் மில்கள் மற்றும் கட்டிட வேலை உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் 90 சதவீத வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி, கல்குவாரிகள்.

பேக்கரிகள், ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வடமாநில தொழிலாளர்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். கிணத்துக்கடவு, நெகமம் பகுதிகளில் அதிகளவில் வட மாநிலத்தவர்கள் வசித்து வருவதால், அவர்களுக்கு இது தமிழ்நாடு என்ற நினைப்பே வருவதில்லை என்று கூறப்படுகிறது. இவர்களின் வருகையால் வேலையிழந்து தவிக்கும் உள்ளூர் தொழிலாளர்கள் விவசாய கூலி வேலைக்கு மட்டும் சென்று குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தற்போது விவசாய கூலி வேலைகளுக்கும் செல்ல துவங்கிவிட்டனர். இதனால் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் 10 மற்றும் 20 பேர் ஒரு குழுவாக சேர்ந்து, தங்களுக்குள் ஒரு மேஸ்திரியை நியமித்துக்கொண்டு, ஏக்கர் கணக்கில் மொத்தமாக ஒப்பந்தம் பேசி, நாற்று நடுதல், களை எடுத்தல், மக்காச்சோளம், சோளம் வெட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு, குறித்த நேரத்திற்குள் செய்து முடித்து விடுகின்றனர்.

இதனால், உள்ளூர் தினக்கூலி தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும் நிலை உருகியுள்ளது.

Related Stories: