மும்முனை மின்சாரம் போதிய அளவில் கிடைக்காததால் பம்புசெட் குறுவை சாகுபடி பாதிப்பு

*தவெக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

*பொருளாதார இழப்பை சந்திப்பதாக வேதனை

வல்லம் : மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், பம்ப்செட் வசதியை நம்பி குறுவை சாகுபடி செய்த விவசாயிகள், போதிய மும்முனை மின்சாரம் கிடைக்காததால் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.

பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், ஏக்கருக்கு சுமார் 22 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் பேராபாயம் உருவாகியுள்ளது.

நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக வழக்கமான தேதியில் தண்ணீர் திறக்கப்படாததால், ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாற்று ஏற்பாடாக நிலத்தடி நீரைப் பயன்படுத்தி பம்பு செட்டுகள் (மின்மோட்டார்கள்) மூலம் குறுவை சாகுபடியைத் தொடங்கியுள்ள விவசாயிகளும், போதிய மும்முனை மின்சாரம் கிடைக்காததால் நடவு செய்த பயிர்களை காப்பாற்ற முடியாமல் கண்ணீர் விட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு ஆற்றுப்பாசன நீர் கிடைக்காத சூழலிலும், குறுவை சாகுபடியை கைவிட மனமில்லாத விவசாயிகள், நிலத்தடி நீரை நம்பி பம்பு செட்டுகள் மூலம் நாற்று நட்டு, சாகுபடிப் பணிகளைத் தொடங்கினர். ஆனால், கடந்த சில வாரங்களாக விவசாயத்திற்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் (3-Phase Power) கடுமையான தட்டுப்பாட்டுடன், மிகக் குறைந்த நேரமே வழங்கப்பட்டு வருகிறது.

ஆற்றில் தண்ணீர் வராத சூழலில், கடன் வாங்கியும் நகைகளை அடகு வைத்தும் பம்ப் செட் பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடந்த சில வாரங்களாக கிராமப்புறங்களில் விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

போதிய நீர் பாய்ச்ச முடியாததால், பச்சைப் பசேலென இருக்க வேண்டிய இளம் பயிர்கள் தற்போது போதிய நீரின்றிக் காய்ந்து கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் சாகுபடிக்கு செய்த பணம் வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் ஆழ்ந்த வேதனையில் உள்ளனர்.

இதுவரை ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.22 ஆயிரம் வரை விவசாயிகள் கடன் வாங்கி செலவு செய்துள்ளனர். ஆனால் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருவதால் பெரும் பொருளாதார சரிவை சந்திக்கும் நிலையில் உள்ளனர். இது குறித்து தோழகிரிப்பட்டியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ் கூறியதாவது: ஆற்றுப்பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவில்லை.

போதி அளவு மழை பெய்தால், மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டால் ஒரு போக சம்பா சாகுபடி செய்யலாம் என்று உள்ளனர்.

ஆனால் பம்ப்செட் மூலம் தஞ்சை மாவட்டம் முழுவதும் ஒரத்தநாடு, வல்லம், பூதலூர், பாபநாசம், கும்பகோணம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, அம்மாபேட்டை, சாலியமங்கலம் என்று மாவட்டம் முழுவதும் பரவலாக பம்ப்செட் வாயிலான விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.

நாற்று விட்டு பறித்தல், இயந்திர நடவு, பாய் நாற்றங்கால் முறை என்று பலவிதத்திலும் விவசாயிகள் குறுவை சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதேபோல் குறுங்குளம், மருங்குளம், தோழகிரிப்பட்டி என பலபகுதிகளில் நிலக்கடலை, சோளம், ஆலைக்கரும்பு என மாற்றுப்பயிர் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் பம்ப் செட் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்களைக் காக்க, தினசரி முழுமையாக 18 மணி நேரமும், குறைந்தது 12 மணி நேரமாவது தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் தற்போது எப்போது மும்முனை மின்சாரம் வருகிறது. எப்போது தடைப்படுகிறது என்று தெரியாத நிலை உள்ளது. இதற்காக நாள் முழுவதும் விவசாயிகள் வயலிலேயே காத்திருக்க முடியாது.இதனால் போதிய தண்ணீர் இன்றி குறுவை சாகுபடி, மாற்றுப்பயிர்கள், காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சாகுபடி பயிர்கள் அனைத்தும் கருகி வருகிறது.

முன்பு இருந்ததை விட தற்போது உரத்தின் விலையும் உயர்ந்து விட்டது. தற்போது வரை விவசாயிகள் நெல் சாகுபடிக்காக ஏக்கருக்கு ரூ.22 ஆயிரம் செலவு செய்துள்ளனர். சரியான முறையில் தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி வருகிறது.

கருகிய நாற்றுகளை அகற்றி விட்டு புதிய நாற்றுகள் நட்டாலும் அது பருவம் தவறியதாக அமைந்து விடும். எனவே விவசாயிகளுக்கு முறையாக 18 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத சூழலில் விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அச்சத்தில் விவசாயிகள்

தஞ்சை மாவட்டத்தில் தற்போது 1.57 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதில், இதுவரை 1 லட்சம் ஏக்கரில் (பம்பு செட் வாயிலாக) சாகுபடி பணிகள் நடந்துள்ளது. இருப்பினும் மும்முனை மின்சாரம் சரியான முறையில் விவசாயிகளுக்கு 18 மணிநேரம் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் முழுமையாக 8 மணிநேரம் கூட கிடைப்பதில்லை. அதுவும் எப்போது மும்முனை மின்சாரம் வருகிறது. எப்போது தடைப்படுகிறது என்று தெரியாத நிலையால் விவசாயிகள் தவிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories: