டவுன் பகுதிகளில் காய்கறி மார்க்கெட் இல்லாத அவலம் களையிழந்து காணப்படும் கண்டியப்பேரி உழவர் சந்தை

நெல்லை : டவுன் மற்றும் பேட்டை பகுதி மக்களின் நலன் கருதி கண்டியப்பேரி உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

தமிழகத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைவித்த காய்கறிகளை இடைத்தரகர்கள் இன்றி, தாங்களே விற்பனை செய்யும் வகையில் திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உழவர் சந்தை திட்டத்தை செயல்படுத்தினார். இதன்மூலம் விவசாயிகள் தங்கள் விலை பொருளுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்தனர்.

இத்திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், பொதுமக்களும் விலை குறைவு காரணமாக உழவர்சந்தைகளை நாடி வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். நெல்லை மாநகரை பொறுத்தவரை மகராஜநகர், மேலப்பாளையம், டவுன் கண்டியப்பேரி ஆகிய இடங்களில் உழவர்சந்தைகள் முன்பு சிறப்பாக செயல்பட்டு வந்தன.

காலப்போக்கில் அதிமுக ஆட்சி காலத்தில் உழவர் சந்தைகளை சரியாக பராமரிக்காத காரணத்தால் டவுன் கண்டியப்பேரி உழவர் சந்தை களையிழந்தது. அங்கு கடைகள் குறைய தொடங்கிய நிலையில், 3 அல்லது 4 கடைகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன.

மொத்த காய்கறிகளையும் ஒரே இடத்தில் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால், பொதுமக்களின் வரத்தும் அங்கு தடைப்பட்டது. தற்போது அங்கு கடைகள் மட்டுமே உள்ள நிலையில், விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வருவதில்லை.

நெல்லை மாநகரில் இதற்கு பின்பு ஆரம்பிக்கப்பட்ட என்ஜிஓ காலனி உழவர்சந்தையில் கூட நல்ல விற்பனை நடந்து வரும் நிலையில், கண்டியப்பேரி உழவர் சந்தையை யாரும் கண்டு கொள்ளாத சூழல் உள்ளது.

நெல்லை டவுனை பொறுத்தவரை தற்போது நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் மட்டுமே முக்கிய சந்தையாக உள்ளது. அங்கு சிறு வியாபாரிகளுக்கும், மொத்தமாக வாங்குவோருக்கும் மட்டுமே காய்கறிகள் வழங்கப்படுகின்றன.

சில்லறையாக வாங்க வரும் பொதுமக்களுக்கு அங்கு காய்கறிகள் கிடைப்பதில்லை. டவுன் சுபாஷ்சந்திரபோஸ் மார்க்கெட்டும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டும், காய்கறி விற்பனை அங்கு நடக்காத சூழல் உள்ளது.

எனவே டவுனில் காய்கறிகள் வாங்க இடமின்றி பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். எனவே டவுன், பேட்டை, சுத்தமல்லி சுற்றுவட்டார கிராம மக்களின் நலன் கருதி கண்டியப்பேரி உழவர் சந்தை மற்றும் டவுன் சுபாஷ்சந்திர போஸ் மார்க்கெட் ஆகியவற்றை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கண்டியப்பேரி உழவர் சந்தையில் இரவு நேரங்களில் மது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கும் நிலையில், அவற்றை முற்றிலுமாக தடை செய்து, உழவர் சந்தை முன்பு செயல்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: