நெல்லை: ஜாதி ரீதியிலான குழுவாக இருக்கும் மாணவர்களை வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்ற நெல்லை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஜாதி மோதலை தடுக்க ஆட்சியர் ஆனந்த் மோகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் என்றாலே பொதுவாக தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியாக மோதல் அதிகரிக்க கூடிய மாவட்டம் என்று பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் அதை அரங்கேற்ற கூடிய சம்பவங்களும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது.
நெல்லை அருகே சுத்தமல்லியில் நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரு சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதில் 11ம் வகுப்பு மாணவன் பிடிக்கப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள ஆனந்த் மோகன் இச்சம்பவம் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.
மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், சாதி ரீதியாகக் குழுக்களாகச் செயல்படும் மாணவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்துக் கண்டறியுமாறும், அவர்களைத் தனித்தனியாகப் பிரித்து வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
