×

பைல்களை போட்டுவிட்டு இடைத்தரகர்கள் ஓட்டம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆர்டிஓ ஆபீசில் விஜிலென்ஸ் 6 மணி நேரம் அதிரடி ரெய்டு

*கணக்கில் வராத ரூ.2.85 லட்சம் பறிமுதல்

நெல்லை : நெல்லை, தென்காசி, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய 6 மணி நேர அதிரடி சோதனையில், புரோக்கர்கள், டிரைவிங் பள்ளி உரிமையாளர்கள் என பலரிடம் இருந்து ரூ.2.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இடைத்தரகர்கள் பலர் பைல்களை போட்டுவிட்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்குதல், புதிய வாகன பதிவு, வாகன தணிக்கை மற்றும் எஃப்சி சான்றிதழ் வழங்கும் பணிகளுக்கு அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏடிஎஸ்பி மெக்லரின் எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் ஞானசிங், எஸ்எஸ்ஐக்கள் மாரியப்பன், சீத்தாராமன், ஏட்டுக்கள் முருகன், அண்ணாமலை ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் 12 மணியளவில் நெல்லை என்ஐிஓ காலனியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கு நின்றிருந்த இடைத்தரகர்கள் தங்களது பைல்களை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் எப்போதும் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம் நொடிப்பொழுதில் வெறிச்சோடியது.

அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்குள்ள முக்கிய கோப்புகள், விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி தீவிர சோதனை நடத்தினர். மேலும் அங்கு பணியில் இருந்த 10 ஊழியர்கள் மற்றும் லஞ்சத்திற்கு உடந்தையாக இருந்த புரோக்கர்களை தனித்தனியாக பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதிகாரிகளின் பைகள், அவர்கள் பயன்படுத்தி வந்த வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் விடாமல் சோதனையிட்டனர். சந்தேகத்திற்கு இடமான அதிகாரிகளின் தனிப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் ஜி பே உள்ளிட்ட ஆன்லைன் பண பரிமாற்றங்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். கணக்கில் வராத லஞ்ச பணம் ஏதேனும் பதுக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடந்தது.

இந்த சோதனையின் போது டிரைவிங் பள்ளி உரிமையாளர்கள், புரோக்கர் என 7 பேரிடமிருந்து ரூ.92 ஆயிரம் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மதியம் 12 மணிக்கு விருதுநகர் டிஎஸ்பி பூமிநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புரோக்கர்கள் என சந்தேகிக்கப்படும் 4 நபர்களிடம் ரூ.38,800 போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆர்டிஓ அலுவலகம் அருகேயுள்ள 5 ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பேரிடம் கணக்கில் வராத ரூ.99 ஆயிரம் பணம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 37,800 பறிமுதல் செய்யப்பட்டது. மாலை 6 மணியை பிறகும் நடந்த இந்த சோதனையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள பணியாளர்களிடம் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை, இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையிலான போலீசார் நேற்று வந்தனர்.

அவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் முழுவதும் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வந்ததை அறிந்த சிலர் பணத்தை ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறிந்துள்ளனர். அங்குள்ள அலுவலக வளாகத்தில் தனியாக ரூ.38 ஆயிரம் பணம் கிடந்துள்ளது. இதனை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.

இதேபோன்று அலுவலகத்தில் இருந்த சிலரிடம் கணக்கில் காட்டப்படாத வகையில் இருந்த ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். இதனால் மொத்தம் ரூ.56 ஆயிரத்து 900 கணக்கில் காட்டப்படாத பணத்தை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அங்கு இருந்த இடைத்தரகர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் என 15 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

Tags : Vigilance ,Nellai, Tenkasi ,Thoothukudi RTO ,Nellai ,Anti-Corruption Police ,Tenkasi ,Thoothukudi Regional Transport Offices ,
× RELATED மயான வசதி கேட்டு இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியல்