சென்னை: மும்மொழி கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நிலைப்பாட்டை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்து, தமிழ்நாட்டிற்குரிய நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையில் கூறி இருப்பதாவது:
1968ம் ஆண்டில் அண்ணா முதல்வராக இருந்தபோது, ‘‘மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும்”, என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருமொழி கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், அதனையே இந்த அரசும் தொடர்ந்து கடைபிடிக்கும்.
தேசிய கல்வி கொள்கை 2020ஐ இந்த அரசு கடுமையாக எதிர்க்கும். தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை கடைபிடித்தால்தான் ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்கப்பெற வேண்டிய ரூ.3,458 கோடி நிதியை விடுவிக்க முடியும் என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமமாகும். மும்மொழி கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நிலைப்பாட்டை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்து, தமிழ்நாட்டிற்குரிய நிதியை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.
அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், கல்வியானது பொதுப் பட்டியலில் இருப்பதன் காரணமாக நீட் தேர்வு, தேசிய கல்வி கொள்கை திணிப்பு, மும்மொழி கொள்கை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மையான கல்வி சீர்திருத்தம் என்பது கல்வி நிறுவனங்களின் தரத்தையும், அதன் கற்பித்தல் திறனையும் உயர்த்துவதிலேயே அடங்கியுள்ளது. இதற்கேற்ப, மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ள தேவையான உதவி பேராசிரியர் மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் நிரப்புவதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும். அதுமட்டுமன்றி, உயர்கல்வி துறையில் பல்வேறு அடிப்படை சீர்திருத்தங்களை இந்த அரசு கொண்டு வரும். இதன்மூலம் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி தமிழ்நாடு மாணவர்களுக்கு கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
