×

சொட்டுநீர் பாசனம் அமைத்து மல்சிங் சீட் முறையில் சாமந்தி சாகுபடி

 

ராயக்கோட்டை, ஜூன் 18: ராயக்கோட்டை பகுதியில் தக்காளிக்கு அடுத்தபடியாக விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு மஞ்சள், வெள்ளை, சிவப்பு, நீலம், வயலட், ஆரஞ்ச் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் சாமந்தி சாகுபடி செய்கின்றனர். இங்கு சாகுபடி செய்யும் பூக்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். ராயக்கோட்டை பகுதியில் போதிய மழை பெய்யாத போதிலும், மானாவாரி நிலங்களில் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாயிகள் சாமந்தி சாகுபடி செய்கின்றனர்.அதிலும் குறிப்பாக தண்ணீரை சேமிக்கவும், களை, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மல்சிங் சீட் முறையை விவசாயிகள் கடைப்பிடிக்கின்றனர். இதனால் நல்ல செடிகள் செழித்து வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்கிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்ய நிலத்தை இரண்டு முறை உழுது, 90 செ.மீ., இடைவெளி விட்டு பார் அமைக்க வேண்டும். இந்த பாரில் சொட்டுநீர் பாசன குழாய் அமைத்து, 30 மைக்ரான் அளவு கொண்டு மல்சிங் சீட் போட்டு, மண்ணை அணைத்து மூட வேண்டும். இதில் 25 நாட்கள் நர்சரியில் வளர்க்கப்பட்ட நாற்றுகளை மல்சிங் சீட்டில் துவாரமிட்டு அதில் நடவேண்டும்.
செடிகளுக்கு இடையே ஒரு அடி இடைவெளி விட்டு, நடவு செய்து தினமும் காலை மாலை நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மல்சிங் சீட் முறை என்பதால் தண்ணீர் மிச்சமாவதுடன், களைகள் கட்டுப்படும்.

வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்திய பூச்சி கொல்லி மருந்து அடித்து வரவேண்டும். செடிகள் நடவு செய்த 45 முதல் 60 நாட்களில் பூக்கள் பூக்க தொடங்கும். அவற்றை காலை அல்லது மாலை நேரத்தில் காம்புடன் பறித்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். தற்போது ராயக்கோட்ைட மண்டிகளில் மஞ்சள் சாமந்திக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஆடி மாதம் பிறந்துவிட்டால் கோயில் விழாக்கள், மக்கள் தங்கள் முன்னோருக்கு சாமி கும்பிடுவதால் பூக்களின் தேவை மேலும் அதிகரித்து சாமந்தி கிலோ ரூ.300 வரை விலை உயரும் என்றனர்.

Tags : Rayakottai ,
× RELATED ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி சமையல் கூடத்தில் தீ விபத்து