நாமக்கல், ஜூன் 18: திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரை அடுத்த காடுவெட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்(24). இவர், நாமக்கல்- பரமத்தி ரோட்டில் உள்ள தனியார் டயர் ரீட் ரெட்டிங் நிறுவனத்தில், மேலாளராக வேலை செய்து வருகிறார். காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணகாந்த்(29). இவர், மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக உள்ளார். இவர்களுக்கிடையே உள்ளூர் கோயில் திருவிழா தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை விக்னேஷ் பைக்கில், நாமக்கல்லுக்கு வேலைக்கு வந்துள்ளார். கிருஷ்ணகாந்தும், தனது நண்பர்களுடன் டூவீலரை சர்வீஸ் செய்ய வளையப்பட்டிக்கு வந்துள்ளார்.
குன்னி மரத்தான் கோயில் அருகே வந்தபோது, இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். கிருஷ்ணகாந்துடன் வந்தவர்களும் சேர்ந்து விக்னேஷை கல்லால் தாக்கியுள்ளனர். இதில், இருவரும் படுகாயமடைந்தனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் விக்னேஷை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கிருஷ்ணகாந்தை நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இதுகுறித்து இருதரப்பு புகாரின்பேரில், மோகனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
