புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்திக் தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் நேற்று வழக்கம் போல் விசாரணைகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது வழக்கறிஞர் சுபிசிவானி ஜெய்தீப் என்பவர் ஒரு முறையீட்டை வைத்தார். அதில், ‘‘கடந்த மாதம் 8ம் தேதி அவசர விசாரணை கோரி மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தேன். ஆனால் அந்த மனு விசாரணைக்கு பட்டியலிடாததால் பதிவாளர் அலுவலகத்தை நாடியபோது, நான் தாக்கல் செய்திருந்த மனுவை காணவில்லை என்று தெரிவித்தார்கள் என்று புகாராக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த்,‘‘இந்த விவகாரம் என்பது மிக மிக தீவிரமான பிரச்னை ஆகும். இதுதொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று காட்டமாக தெரிவித்த அவர், மனு தாக்கல் செய்த விபரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு இன்றே தனது அலுவலகத்தில் புகார் அளிக்கும் படி மனுதாரருக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
